ஈரோடு: ஈரோடு சூரம்பட்டி வலசு மயானத்தை தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்கத்தினர் தூய்மை செய்தனர். ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 3ம் மண்டலத்தில் உள்ள சூரம்பட்டி வலசு மயானம் உள்ளது. தமிழக முதல்வர் அறிவித்த மக்கள் இயக்கப்பணியில் கீழ், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்கத்தினர் மயானத்தில் உள்ள முட்புதர்கள், குப்பைகள், வழித்தடங்களை இன்று சுத்தம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, அச்சங்கத்தின் மாநில தலைவர் சண்முகராஜா தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் சென்னியப்பன், மாவட்ட தலைவர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ரங்கராஜ், கோபி கோட்ட தலைவர் தர்மலிங்கம், செயலாளர் ரங்கநாதன், பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து சண்முக ராஜா கூறுகையில், 2002ம் ஆண்டு சாலைப்பணியாளர்கள் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டபோது, பல்வேறு போராட்டங்களை நடத்தி, 2006ம் ஆண்டு மீண்டும் எங்களை அரசு பணியில் சேர்த்துக்கொண்டது. எங்களது போராட்டத்திற்கு உறுதுணையாக இருந்த மக்களுக்கு, நாங்கள் எங்களது விடுமுறை நாட்களில் பல்வேறு பணிகளில் பள்ளி, மக்கள் பயன்படுத்தும் இடங்கள், மயானம் போன்றவற்றில் ஈடுபட்டு வருகிறோம். நேற்று கூட கோவை மாவட்டத்திலும் மயானத்தை சுத்தப்படுத்தினோம். இதன்தொடர்ச்சியாக இன்று சூரம்பட்டிவலசு மயானத்தினை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டோம், என்றார்.