திருவனந்தபுரம்; பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவை சேர்ந்த பிளஸ் 1 மாணவியை ஊட்டிக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது சப்-இன்ஸ்பெக்டர் மானபங்கம் செய்ய முயன்றது தொடர்பாக அவர் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது போக்சோ பிரிவில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் வயநாடு அருகே அம்பலவயல் பகுதியைச் சேர்ந்த ஒரு பிளஸ் 1 மாணவியை, சமூக வலைதளம் மூலம் பழக்கமான ஒருவர், ஊட்டி உள்பட பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இதுதொடர்பாக மாணவியின் உறவினர்கள் அம்பலவயல் போலீசில் புகார் செய்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபரை கைது செய்தனர். தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு அம்பலவயல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாபு தலைமையில் ஒரு பெண் போலீஸ் உள்பட 3 போலீசார் மாணவியை ஊட்டி உள்பட பலாத்காரம் நடந்த இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணை முடிந்து வரும் வழியில் சப்-இன்ஸ்பெக்டர் பாபு, அந்த மாணவியை கையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்ய முயன்றுள்ளார். மேலும் அவருக்கு தெரியாமல் தனது செல்போனில் போட்டோவும் எடுத்து உள்ளார். இதற்கிடையே விசாரணை முடிந்து வயநாடு திரும்பிய பிறகு மாணவியை போலீசார் அங்குள்ள குழந்தைகள் நல மையத்தில் ஒப்படைத்தனர்.
இதற்கிடையே மாணவிக்கு கவுன்சிலிங் நடந்தது. அதில் தன்னை சப்-இன்ஸ்பெக்டர் மானபங்கம் செய்ய முயன்றது குறித்து கூறி உள்ளார். இது குறித்து குழந்தைகள் நல மையத்தினர் வயநாடு மாவட்ட எஸ்பி ஆனந்திடம் புகார் செய்தனர். இதையடுத்து சம்பவம் குறித்து உடனே விசாரணை நடத்த வயநாடு டிஎஸ்பிக்கு உத்தரவிட்டார்.
இந்த விசாரணையில் மாணவியை சப்-இன்ஸ்பெக்டர் பாபு மானபங்கம் செய்ய முயன்றது தெரியவந்தது. அதன்படி பாபுவை சஸ்பெண்ட் செய்யவும், போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்யவும் கண்ணூர் சரக டிஐஜி ராகுல் உத்தரவிட்டார். மேலும் சப்-இன்ஸ்பெக்டர் பாபு மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், அவருடன் சென்ற பெண் போலீஸ் உள்பட 2 போலீசார் மீது விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.