*2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
கொடைக்கானல் : கொடைக்கானலில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழைக்கு ராட்சத மரம் சாலையில் விழுந்தது. இதனால் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் கொடைக்கானல் நகர் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அவ்வப்போது மின்தடையும் ஏற்பட்டு வருகிறது.
நேற்றுகாலை 10 மணி அளவில் கொடைக்கானல் கீழ்மலை கிராமப்பகுதியான பண்ணைக்காடு - தாண்டிக்குடி பிரதான சாலையில், ராட்சத மரம் சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ராட்சத மரத்தை நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் மீட்பு படையினர் வெட்டி அகற்றினர். பின்னர் போக்குவரத்து சீரடைந்தது.
மின்கம்பங்கள், மரங்கள் சேதம் :
கனமழைக்கு வடமதுரை அருகே கலர்பட்டியில் தென்னை மரம் முறிந்து உயர் மின்னழுத்த கம்பியில் விழுந்தது. இதனால் 4 மின்கம்பங்கள் சாய்ந்து சாலையில் விழுந்தன. பொதுமக்கள் நடமாட்டம் குறைவால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இதனால் 80 கிராமங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் மின்சாரத்துறை ஊழியர்கள் மின்கம்பங்களை விரைவாக அப்புறப்படுத்தினர். தற்காலிகமாக மாற்று மின்சார வழி மூலம் துண்டிக்கப்பட்ட கிராமங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது.