×

பழநி முருகன் கோயிலில் நவபாஷாண சிலையை பாதுகாப்பு குழு ஆய்வு

பழநி : பழநி முருகன் கோயில் நவபாஷாண சிலையை தலைமை ஸ்தபதி மற்றும் சிலை பாதுகாப்பு குழுவினர் ஆய்வு செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் அடுத்த ஆண்டு ஜனவரியில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது. அதைத்தொடர்ந்து பழநியில் கும்பாபிஷேக பணிகள் முழுவீச்சில் நடைபெறுகிறது.

 கும்பாபிஷேக பணியின்போது நவபாஷாணத்தாலான மூலவர் சிலையை பாதுகாத்து பலப்படுத்தவும், ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை அளிக்கவும் ஓய்வு பெற்ற நீதிபதி பொங்கியப்பன், தலைமை ஸ்தபதி தட்சிணாமூர்த்தி மற்றும் ஆன்மிக சான்றோர்கள், ஆகம வல்லுநர்கள், மக்கள் பிரதிநிதிகள் என 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவினர் கடந்த மாதம் கோயில் அர்த்த மண்டபத்துக்குள் சென்று சிலையை பார்வையிட்டனர். நேற்று குழுவை சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி பொங்கியப்பன் முன்னிலையில் தலைமை ஸ்தபதி தட்சிணாமூர்த்தி மற்றும் ஸ்தபதிகள், கோயில் குருக்கள், பழநி முருகன் கோயில் மூலவர் சிலையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும் கருவறை பகுதியில் உள்ள தங்க படிக்கட்டுகள் அகற்றப்பட்டதையும் பார்வையிட்டனர். பின்னர் நேற்று மதியம் கோயில் அலுவலகத்தில் சிலை பாதுகாப்புக்குழுவின் கூட்டம் நடைபெற்றது. இதில் மூலவர் சிலை பாதுகாப்பு குழுவினர், கோயில் அறங்காவலர் குழுவினர், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன் கூறுகையில், ‘‘சிலை செய்வதும், பாலாலய பூஜை செய்வதும் ஸ்தபதிகள் தான். அதன்படி ஸ்தபதி குழுவினர் ஆகம விதியை பின்பற்றியே மூலவர் சிலையை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு குறித்து தவறான தகவல், வதந்திகளை பரப்புபவர்கள் சுயவிளம்பரத்துக்காக செய்கின்றனர்.

எனவே ஆய்வு குறித்து பரப்பப்படும் தவறான கருத்துகளை நம்ப வேண்டாம். ஆய்வு என்பது அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை செய்துதான் செய்கிறோம்’’என்றார். ஆய்வு குறித்து சிலை பாதுகாப்பு குழுவை சேர்ந்த ஓய்வு நீதிபதி பொங்கியப்பன் கூறுகையில், ‘‘அறநிலையத்துறை தலைமை ஸ்தபதி மற்றும் ஸ்தபதி குழுவினர் சிலையை காண வேண்டும் என்ற கோரிக்கையை அடுத்து அரசின் வழிகாட்டுதல் மற்றும் ஆகம விதிப்படி நேற்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அடுத்தகட்ட பணிகள் குறித்து மேற்கொள்ள முடிவு செய்யப்படும். மேலும் ஆய்வுக்கு முன்னதாக அர்ச்சகர்கள், குருக்கள் ஆகியோருடன் ஆலோசனை கூட்டம் நடத்தி ஆகம விதிப்படி சிறப்பு பூஜை செய்யப்பட்டது’’ என்றார்.

Tags : Palani Murugan temple , Palani, Murugan Temple, Navabhashana statue, Safety Committee Review
× RELATED கோயிலில் உழவார பணி