பெரம்பூர்: புளியந்தோப்பில் ஆஞ்சநேயர் கோயிலில் மழைநீர் புகுந்ததால் தண்ணீரில் நின்றபடி, காதல் ஜோடி திருமணம் செய்துகொண்டனர். சென்னையில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டாலும், நேற்றைய தினம் முகூர்த்த நாள் என்பதால் பல்வேறு இடங்களிலும், ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் மழையிலும் நடைபெற்றது.
கொளத்தூர் பகுதியை சேர்ந்த முகேஷ், மூலக்கடை பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி ஆகிய 2 பேரும் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். காதல் ஜோடிகளான இவர்கள் திருமணம், பெற்றோர் சம்மந்தத்துடன் நேற்று புளியந்தோப்பு பட்டாளம் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் நடைபெற்றது.தொடர்மழை காரணமாக பட்டாளம் ஆஞ்சநேயர் கோயில் முழுவதும் மழைநீரால் சூழப்பட்டிருந்தது.
இதனால், மழைநீர் கோயிலுக்குள் நின்றாலும், தங்களது திருமணம் நிற்காமல் நடக்க வேண்டும் என்ற நோக்கில் மழைநீரில் நின்றபடியே இவர்களின் திருமணம் நடைபெற்றது. சுற்றமும் சூழ வருகை தந்து திருமணம் செய்துகொண்ட தம்பதியினரை வாழ்த்த வேண்டுமென்ற வகையில் கோயிலில் இருந்த மழைநீர் சூழ இந்த திருமணம் இனிதே நடைபெற்றது.