×

டி20 உலக கோப்பை பைனல் களம் காண காத்திருக்கும் மழை

மெல்போர்ன்: உலக கோப்பைத் தொடரில் அடிக்கடி தலை காட்டிக் கொண்டிருந்த மழை இறுதி ஆட்டத்தில் கனமழையாக  களம் காண வாய்ப்புள்ளதாக ஆஸி. வானிலை அறிக்கைகள் கட்டியம் கூறுகின்றன. ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் அக்.16ம் தேதி தொடங்கியது. தகுதிச் சுற்று ஆட்டங்கள் முடியும் வரை காத்திருந்த மழை சூப்பர்-12 சுற்று தொடங்கியதும் சுறுசுறுப்பானது.

முதலில் ஜிம்பாப்வே-தென் ஆப்ரிக்கா இடையிலான ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது.  அதேபோல் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்ரிக்கா தோற்க மழையே காரணமாக  அமைந்தது. மேலும்  இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டமும் மழையால் நிறுத்தப்பட்டது. அதனால் ஆஸியும், தெ.ஆப்ரிக்காவும்  அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு பறிப்போனது. மேலும்  வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் ‘இந்தியா வெல்லவும் மழைதான் காரணம்’ என விமர்சனங்களும் எழுந்தன.

 ஒரு பந்து கூட வீசப்படாமல்  ஆளுக்கொரு வெற்றிப் புள்ளி என்ற கணக்கிலும், பாதியில் நிறுத்தப்பட்டு டக்வொர்த் லீவிஸ் முறையிலும் பல ஆட்டங்கள் முடிவுக்கு வந்தன. அதனால் சில அணிகள் அரையிறுதிக்கு முன்பே வெளியேறும் நிலைமை ஏற்பட்டன.இதற்கிடையில் இந்தியா அரையிறுதியுடன் வெளியேறியதால் இந்திய ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அந்த ஏமாற்றம் நாளை பாகிஸ்தான், இங்கிலாந்து ரசிகர்களுக்கும் சேர்ந்து கிடைக்க வாய்ப்பு உள்ளது.  காரணம் பாகிஸ்தான்-இங்கிலாந்துடன் மழையும் பைனலில் களம் காண  காத்திருப்பதாக ஆஸி. வானிலை மைய அறிக்கைகள் சொல்கின்றன.

 வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, பைனல் நடைபெறும் மெல்போர்னில் நாளை இடியுடன் கூடி கனமழை பெய்ய 95 முதல் 100சதவீத வாய்ப்பு உள்ளதாம். இதை போட்டி நிர்வாகமும் எதிர்பார்த்து நாளை ஆட்டத்தை நடத்த முடியாவிட்டால்  திங்கட்கிழமைக்கு(ரிசர்வ் நாள்) தள்ளி வைக்க திட்டமிட்டுள்ளது.  முதலில் குறைந்த ஓவர்களில் ஆட்டத்தை முடிக்க முயற்சி செய்வார்களாம்.  ஓவர்கள் குறைக்கப்பட்ட பிறகும் ஆட்டம் நிறுத்தும் சூழ்நிலை ஏற்பட்டால் மறுநாள் விட்ட இடத்தில் இருந்து ஆட்டத்தை தொடர்வார்களாம். திங்கட்கிழமையும் மழை விளையாட வந்தால், கோப்பையை இரு அணிகளுக்கும் பகிர்ந்து அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


Tags : T20 World Cup , T20 World Cup, Final, Rain
× RELATED டி20 உலக கோப்பையில் பங்குபெற ஐபிஎல்...