ஆலூர்: தமிழ்நாடு, ஆந்திரா, மகாராஷ்டிரரா, மும்பை, பெங்கால், ரயில்வே, சர்வீசஸ் என நாட்டின் 38 அணிகள் பங்கேற்கும் உள் நாட்டு கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் போட்டித் தொடர் இன்று தொடங்குகிறது. இந்த அணிகள் ஏ, பி, சி, டி, ஈ என 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.லீக் சுற்று ஆட்டங்கள் கொல்கத்தா, ராஞ்சி, மும்பை, பெங்களூர், ஆலூர்(பெங்களூர்), டெல்லி என 6 நகரங்களில் ரவுண்டு ராபின் முறையில் நடக்கும். கால்றுதி, அரையிறுதி, இறுதி ஆட்டங்கள் நடைபெறும் இடம் பின்னர் முடிவு செய்யப்படும். தமிழ்நாடு இடம் பெற்றுள்ள எலைட் சி பிரிவில் கோவா, அரியானா, கேரளா, ஆந்திரா, அருணாச்சல் பிரதேசம், பீகார், சட்டீஸ்கர் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. தமிழ்நாடு அணி ஆலூரில் நடைபெறும் தனது முதல் சுற்று ஆட்டத்தில் இன்று பீகார் அணியை எதிர்கொள்கிறது.
இதுவரை நடந்த 20 விஜய் ஹசாரே தொடர்களில் தமிழநாடு அணிதான் அதிகபட்சமாக 5 முறை கோப்பையை வென்றுள்ளது. கடந்த முறையும் இறுதி போட்டி வரை முன்னேறியது.
அப்போது அதிக ரன் குவித்தும் மழை காரணமாக ‘வி.ஜெயதேவன்’ முறையில் இமாச்சல் பிரதேசத்திடம் சாம்பியன் பட்டத்தை பறி கொடுக்கும் நிலைக்கு ஆளானது. அதனால் இந்த முறை பாபா இந்திரஜித் தலைமையிலான தமிழ்நாடு அணி மிகுந்த நம்பிக்கையுடன் களம் காண உள்ளது. கூடவே வங்கதேசம் லெவன் தொடருக்கு எதிரான ஆட்டத்தில் காயமடைந்த நடராஜனுக்கு பதிலாக முகமது அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார். தமிழ்நாடு அணி: பாபா இந்தரஜித்(கேப்டன்), வாஷிங்டன் சுந்தர் (து.கேப்டன்), சாய் சுதர்சன், சாய் கிஷோர், ஷாருக்கான், நாரயண் ஜெகதீசன், ரகுபதி சிலம்பரசன், மணிமாறன் சித்தார்த், பாபா அபரஜித், எம்.முகமது, என்.எஸ்.சதுர்வேத், ஜே.கவுசிக், சந்தீப் வாரியர், சோனு யாதவ், லக்ஷ்மேஷா சூரியபிரகாஷ்.