டூரின்: உலகத் தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள வீரர்கள் பங்கேற்கும் ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் போட்டி இத்தாலியின் டூரின் நகரில் நாளை தொடங்குகிறது. ஆண்டின் முடிவில் உலகத் தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடிக்கும் வீரர்களுக்கு ஏடிபி பைனல்ஸ், வீராங்கனைகளுக்கு டபிள்யூடிஏ பைனல்ஸ் ஒற்றையர், இரட்டையர் ஆட்டங்கள் ஆண்டுதோறும் நடைபெறும்.
கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றவர்கள் தரவரிசயைில் 8 இடங்களுக்குள் வராவிட்டாலும் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அதற்கு பிறகே தரவரிசை கருத்தில் கொள்ளப்படும்.
சில நாட்களுக்கு முன்பு டபிள்யூடிஏ பைனல்ஸ் அமெரிக்கவில் நடந்து முடிந்தது. இந்நிலையில் வீரர்க்ளுக்கான ஏடிபி பைனல்ஸ் நாளை தொடங்குகிறது. உலகின் நெம்பர் ஒன் வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ்(யுஎஸ் ஓபன் சாம்பியன்) காயம் காரணமாக இந்த தொடரில் பங்கேற்கவில்லை.
எனவே ஒற்றையர் பிரிவில் ஆஸி, பிரெஞ்ச் ஓபன் சாம்பியன் ராஃபேல் நடால்(2வது ரேங்க், ஸ்பெயின்), ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ்(3வது ரேங்க், கிரீஸ்), காஸ்பர் ரூட்(4வது ரேங்க், நார்வே), டானில் மெத்வதேவ்(5வது ரேங்க், ரஷ்யா), ஃபெலிக்ஸ் அகர்(6வது ரேங்க், கனடா), ஆந்த்ரே ரூபலவ்(7வது ரேங்க், ரஷ்யா), விம்பிள்டன் சாம்பியன் நோவக் ஜோகோவிச்(8வது ரேங்க், செர்பியா), டெய்லர் ஃபிரிட்ஸ்(9வது ரேங்க், அமெரிக்கா) ஆகியோர் விளையாட உள்ளனர்.
இவர்கள் தலா 4 வீரர்களை கொண்ட 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ரவுண்டு ராபின் முறையில் லீக் சுற்று ஆட்டங்கள் நடைபெறும். அந்த பிரிவுகளுக்கு பச்சை, சிவப்பு என பெயிரிடப்பட்டு உள்ளன. இந்த பிரிவுகளில் முதல் 2 இடங்களை பிடிப்பவர்கள் அரையிறுதிக்கு தகுதிப் பெறுவார்கள். அவற்றில் வெற்றிப் பெறுபவர்கள் நவ.20ம்தேதி நடைபெறும் இறுதி ஆட்டத்தில் களம் காணுவார்கள். இதேபோல் இரட்டையர் பிரிவில் முதல் 8 இடங்களை பெற்றவர்கள், கிராண்ட் ஸ்லாம் வென்றவர்கள் என 8 ஜோடிகளும் ஏடிபி பைனல்ஸ் இரட்டையர் பிரிவில் களம் காண உள்ளனர்.