×

கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். கன்னியாகுமரியில் ஐயப்ப பக்தர்கள் சீசன் மற்றும் கோடைக்கால சீசனில் சுற்றுலா பயணிகளின் வரத்து மிக அதிகமாக காணப்படும். இதுபோல விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களிலும் கூட்டம் அதிகம் காணப்படும். இந்நேரங்களில் இங்கு வியாபாரமும் களைகட்டும். கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் சென்றுவர பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு சேவை நடத்தி வருகிறது.

சமீபத்தில் மழை, சூறைக்காற்று மற்றும் கடல் கொந்தளிப்பால் சுற்றுலா பயணிகள் வரத்து அடிக்கடி குறைந்தது. இருப்பினும் விடுமுறை நாட்களில் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கினர். வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் பண்டிகை விடுமுறையையொட்டி கன்னியாகுமரி உட்பட சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் படையெடுத்தனர். இந்த நிலையில் இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியில் குவிந்தனர். அவர்கள் அதிகாலை முக்கடல் சங்கம கடற்கரையில் திரண்டு சூரிய உதயத்தை பார்த்து ரசித்தனர். மேலும் கடலில் நீராடி பகவதி அம்மனை தரிசித்தனர்.

பின்னர் விவேகானந்தர் நினைவு மண்டபம் செல்ல படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்து, ஆர்வத்துடன் படகில் சென்று பார்த்து ரசித்து திரும்பினர். இதேபோல திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் காந்தி, காமராஜர் மணிமண்டபங்கள், கடற்கரை பகுதியில் உள்ள தமிழன்னை பூங்கா, பழத்தோட்டம் சுற்றுச்சூழல் பூங்கா மற்றும் சுரங்க மீன் கண்காட்சி, கடற்கரை சாலை ஆகிய இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

சுற்றுலா பயணிகள் வருகையால் கன்னியாகுமரி களைகட்டியுள்ளது. இதனால் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் திருவள்ளுவர் சிலை ரசாயன கலவை பூசும் பணி நடப்பதால் அங்கு படகு போக்குவரத்து இல்லை. கடற்கரை பகுதியில் சுற்றுலா போலீசார் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Kanyakumari , Tourists flock to Kanyakumari
× RELATED கன்னியாகுமரி – காரோடு நான்கு...