×

உளுந்தூர்பேட்டை பகுதியில் ஏழு மணி நேரமாக தொடர்மழை: மக்கள் அவதி

உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இன்று அதிகாலை முதல் தொடர்ந்து குளிர் காற்றுடன் விடாமல் மழை பெய்து வருகிறது. இந்த மழையினால் பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சாலை ஓர சிறு வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். உளுந்தூர் பேட்டை பேருந்து நிலையம் மற்றும் கடைவீதிகளில் மக்கள் நடமாட்டம்  இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. பேருந்துகளில் பயணிகள் மிக குறைவாக சென்று வருகின்றனர்.

சாலை ஓரங்கள் மற்றும் தாழ்வான பகுதியில் மழை நீர் வெள்ளம் போல் சொல்வதாலும் தாழ்வான பகுதியிலுள்ள வீடுகளுக்குள் மழை நீர் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை வெளியேற்றும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர். குளிர் காற்றுடன் மழை பெய்து வருவதால் சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் அளவு மூன்று சென்டிமீட்டராக பதிவாகியுள்ளது. இந்த மழையினால் மானாவரி உளுந்து பயிரிட்டு இருந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளன.

Tags : Ulundurpet , Continuous rain for seven hours in Ulundurpet area: people suffer
× RELATED உளுந்தூர்பேட்டை தொகுதி வாக்குப்பதிவு...