தென்காசி: தென்காசி மாவட்டத்திலுள்ள இராமநதி அணை மற்றும் கடனா அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் மற்றும் வட்டம், மேலக்கடையம் கிராமத்தில் உள்ள இராமநதி அணையிலிருந்து பாசனம் பெறக்கூடிய நிலங்களுக்கு 1432-ம் பசலி பிசான சாகுபடி செய்வதற்கு 12.11.2022 முதல் 31.03.2023 வரை 140 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 60க.அடி அளவுக்கு மிகாமல், பாசனபருவகாலத்தின் மொத்த தேவையான தண்ணீர் அளவான 823.92 மி.க.அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதன்மூலம் தென்காசி மாவட்டம் மற்றும் வட்டத்தில் 4943.51 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
தென்காசி மாவட்டம், தென்காசி வட்டம், சிவசைலம் கிராமத்தில் உள்ள கடனா அணையிலிருந்து பாசனம் பெறும் நிலங்களுக்கு பிசான சாகுபடிக்கு கடனா நீர்த்தேக்கத்திலிருந்து 12.11.2022 முதல் 31.03.2023 வரை 140 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 125 க.அடி அளவுக்கு மிகாமல், பாசன பருவகாலத்தின் மொத்த தேவையான தண்ணீர் அளவான 1653.87 மி.க.அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.
இதன் மூலம் திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் அம்பாசமுத்திரம், தென்காசி மற்றும் சேரன்மகாதேவி வட்டங்களில் 9923.22 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.