×

கணவர் வீட்டின் முன் இளம்பெண் தர்ணா: திருப்பூரில் பரபரப்பு

திருப்பூர்; திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்தவர் மருதை வீரன். இவரது மகள் நர்மதா (28). இவர் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது அதே நிறுவனத்தில் பணியாற்றிய பாண்டியன் நகரை சேர்ந்த வாலிபர் ஹரிராஜூடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இருவரும் திருப்பூர் பிஎன் ரோட்டிலுள்ள கோயிலில் திருமணம் செய்துகொண்டு, பதிவுத்துறையிலும் திருமணத்தை பதிவு செய்தனர். தொடர்ந்து, ஹரிராஜ் பெற்றோருடன் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடும்ப பிரச்னை காரணமாக கொங்கு மெயின் ரோடு பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து ஹரிராஜூம், நர்மதாவும் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில், ஆடி மாதத்தையொட்டி நர்மதா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் மீண்டும் வீட்டிற்கு வந்தபோது சாதியை காரணம் காட்டி நர்மதாவை, அவரது காதல் கணவர் ஹரிராஜ் ஏற்றுக்கொள்ள மறுத்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து கடந்த 3 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து நர்மதாவை ஏற்றுக்கொள்ள ஹரிராஜ் பெற்றோரும் மறுத்து வந்துள்ளனர். இது குறித்து நர்மதா திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம், கொங்கு நகர் சரக மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.

இதையடுத்து காதல் தம்பதியருக்கு போலீசார் கவுன்சிலிங் கொடுத்து அனுப்பியதாகவும், நேற்று மீண்டும் மகளிர் காவல் நிலையத்தை நர்மதா அணுகியபோது போலீசார் சரிவர பதில் அளிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால், நர்மதா தனது காதல் கணவருடன் தன்னை சேர்த்து வைக்கக்கோரி பாண்டியன் நகரில் உள்ள கணவர் வீட்டின் முன்பு தனது தந்தை மருதை வீரனுடன் சேர்ந்து நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.

Tags : Tirupur , Young girl dharna in front of her husband's house: stir in Tirupur
× RELATED நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு