×

திருவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகத்தில் 2வது கட்டமாக புலிகள் கணக்கெடுப்புக்கு 80 கேமராக்கள்-வனத்துறை அதிகாரி தகவல்

திருவில்லிபுத்தூர் : திருவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகத்தில், 2வது கட்டமாக புலிகள் கணக்கெடுப்பு பணிக்காக 80 கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது என வனத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.விருதுநகர் மற்றும் தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள 1 லட்சம் ஹெக்டேர் பரப்பளவு வனப்பகுதியை இணைத்து, இந்தியாவின் 51வது புலிகள் காப்பகமாக திருவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகத்தை கடந்த 2021ல் மத்திய அரசு அறிவித்தது.

இந்த வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, கரடி, செந்நாய், மான், ராஜநாகம், மலைப்பாம்பு உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு மூன்று விதமாக நடத்தபடும். அனைத்து வகை வனவிலங்குகளுக்கு ஒரு முறை, யானை மற்றும் புலிகளுக்கு தனியாக என கணக்கெடுப்பு பணி நடைபெறும். அப்போது நேரில் பார்த்தவை, விலங்குளின் ஒலி, எச்சம், கால்தடம், கேமரா பதிவு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு வனவிலங்குகள் கணக்கெடுப்பு நடைபெறும்.

திருவில்லிபுத்தூர் வனப்பகுதியில் சில மாதங்களுக்கு முன் வனவிலங்கு கணக்கெடுப்பு நடைபெற்றது. இதற்காக சத்தியமங்கலம் வனப்பகுதியில் பயன்படுத்தப்பட்ட அதிநவீன கேமரா திருவில்லிபுத்தூருக்கு கொண்டுவரப்பட்டு கணக்கெடுப்புக்காக பயன்படுத்தப்பட்டது. அதில், சிறுத்தைகள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் பதிவாகி இருந்தன. முதற்கட்ட கணக்கெடுப்பில் 300 கேமராக்கள் பொருத்தப்பட்டு பணிகள் நடைபெற்றன.

இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு:

இந்நிலையில், புலிகள் காப்பகத்தில் இரண்டாம் கட்ட கணக்கெடுப்பில் புலிகள் நடமாடும் குறிப்பிட்ட இடங்களை தேர்வு செய்து கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. திருவில்லிபுத்தூர் வனப்பகுதியில் நான்கு சரகங்களில் அதாவது திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, ராஜபாளையம், மற்றும் சாப்டூர் ரேஞ்ச்களில் தலா 20 எண்ணிக்கையில் மொத்தம் 80 கேமராக்கள் பொருத்தப்பட்டு புலிகள் கணெக்கெடுப்பு பணி தொடங்கப்பட உள்ளது.

இது குறித்து வனத்துறை அதிகாரி கூறுகையில், ‘திருவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகத்தில் திருவில்லிபுத்தூர் வனப்பகுதிகளில் சுமார் 6 புலிகள் கண்டறியப்பட்டு உள்ளது. இதன் துல்லிய கணக்கெடுப்புக்காக இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. புலிகள் இனப்பெருக்க காலமான நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்களில் வழக்கத்தை விட அதிகளவில் புலிகள் நடமாடும். புலிகள் வனப்பகுதியில் குறிப்பிட்ட எல்லையை வரையறுத்து வாழும்.

தற்போது வடகிழக்கு பருவமழை காலத்தில் புலிகள் எல்லையை குறிப்பதற்கு அதிக அளவு வெளியில் நடமாடும். அந்த வகையில் புலிகள் அதிகமாக நடமாடும் 80 இடங்களை கண்டறிந்து, அதிநவீன கேமராக்கள் பொறுத்த உள்ளோம். குறிப்பிட்ட காலத்திற்கு கேமராக்களை கண்காணிக்க ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த முறை கேமரா பொருத்தியபோது, சிறுத்தைகள் எண்ணிக்கை அதிகரித்திருப்பது தெரிய வந்தது, இந்த கேமரா மூலம் பல்வேறு அறிய வனவிலங்குகளின் நடமாடத்தை அறிய முடிந்தது. சில தினங்களில் பொருத்தப்படும் கேமராக்கள் குறிப்பிட்ட நாட்கள் வரை வனப்பதில் இருக்கும் என வனத்துறை அதிகாரி தெரிவித்தார்.



Tags : Tiruvilliputhur ,Meghamalai Tiger Reserve-Forest Department , Tiruvilliputhur: 80 cameras to be installed in Tiruvilliputhur-Meghamalai Tiger Reserve for tiger census in 2nd phase
× RELATED வனவிலங்குகளின் உயிர்களைப் பாதுகாக்க...