தண்டையார்பேட்டை: வடசென்னை பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் நிழற்குடை அமைக்கும் பணியை வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி தொடங்கி வைத்தார். வடசென்னை பகுதியில் உள்ள ராயபுரம், வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், நெடுஞ்சாலை தபால் நிலையம் பேருந்து நிறுத்தம் மற்றும் மகாராணி திரையரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் பேருந்து நிறுத்தங்களில் பயணிகள் வசதிக்காக நிழற்குடை அமைக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்தது.
அதன்பேரில், வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.22 லட்சம் ஒதுக்கீடு செய்தார். இதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. இதில், வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி கலந்துகொண்டு நிழற்குடை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், சென்னை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் இளைய அருணா, எம்எல்ஏ எபினேசர், மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன், பகுதி செயலாளர்கள் ஜெபதாஸ் பாண்டியன், லட்சுமணன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் மருது கணேஷ், இலக்கிய அணி செயலாளர் பாண்டி செல்வம் மற்றும் திமுகவினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.