×

குடிநீர், கழிவுநீர் பிரச்னைக்கு புகார் தெரிவிக்கலாம்: சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு

சென்னை: குடிநீர், கழிவுநீர் குறித்த புகார்களை, நாளை அனைத்து பகுதி அலுவலகங்களில் நடைபெறும் சென்னைக் குடிநீர் வாரிய குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் அளிக்கலாம் என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  சென்னைக் குடிநீர் வாரியம் சார்பில், குறை தீர்க்கும் கூட்டங்கள் இரண்டாவது சனிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாதத்திற்கான குறை தீர்க்கும் கூட்டம் நாளை (12ம்தேதி) காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை குடிநீர் வாரிய அனைத்து பகுதி அலுவலகங்களில் நடைபெறும்.

இந்த குறை தீர்க்கும் கூட்டங்கள் வாயிலாக பொதுமக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு பகுதி அலுவலகங்களிலும் ஒரு மேற்பார்வைப் பொறியாளர் தலைமையில் இக்கூட்டம் நடைபெறும். எனவே, குறை தீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று குடிநீர், கழிவுநீர் சம்பந்தப்பட்ட பிரச்னைகள், குடிநீர், கழிவுநீர் வரி மற்றும் கட்டணங்கள், நிலுவையில் உள்ள குடிநீர், கழிவுநீர் புதிய இணைப்புகள் தொடர்பான சந்தேகங்களை நேரில் மனுக்கள் வாயிலாக தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், மழைநீர் சேகரிப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான விளக்கங்களையும் கூட்டத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : Complaints can be made for drinking water and sewage problems: Chennai Drinking Water Board Notification
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...