அடிலெய்ட்: சர்வதேச டி20 போட்டிகளில் 4000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் இந்திய நட்சத்திர வீரர் கிங் கோலி. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்த மகத்தான சாதனையை படைத்துள்ளார் கிங் கோலி. மேலும் டி20 உலகக்கோப்பை போட்டிகளில் 100 ஃபோர்கள் அடித்து சாதனை படைத்துள்ளார் கிங் கோலி.
முன்னதாக அடிலெய்டில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை வீரர் மஹேல ஜெயவர்த்தனேவின் 1016 ரன்கள் என்ற சாதனையை முறியடித்து, அதிக ரன் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார் கோலி.
மேலும் 2014, 2016 ஆகிய இரு டி20 உலகக்கோப்பை தொடரிலும் தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர் என்ற பெருமையைப் பெற்றார் கோலி. டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன் குவித்த வீரர் என்ற பெருமையையும் கோலி பெற்றுள்ளார்.
இந்தப் பட்டியலில், ரோஹித் சர்மா, மார்ட்டின் கப்தில், பாபர் அசாம், பால் ஸ்டிர்லிங் ஆகியோரை விட கோலி முன்னிலையில் உள்ளார் . தற்போது கோலியின் ஸ்டிரைக் ரேட் கிட்டத்தட்ட 140 ஆகவும் சராசரி 50க்கு மேல் உள்ளது பிரம்மிக்கத்தக்கது. நடப்பு ஆண்டு டி20 உலகக் கோப்பையில் 6 போட்டிகளில் 270 ரன்களுக்கு மேல் குவித்து அதிக ரன்கள் குவித்தோர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் கோலி.