சென்னை: காஞ்சிபுரம் - சென்னை கடற்கரை இடையே கூடுதல் ரயில்களை இயக்க நடவிக்கை எடுக்க வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், மாவட்ட செயலாளர் சங்கர் தலைமையிலான குழுவினர் காஞ்சிபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வத்திடம் கோரிக்கை மனு வழங்கியுள்ளனர். அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: கொரோனா பொது முடக்கத்தின்போது, சென்னை கடற்கரை - அரக்கோணம் வழித்தடத்தில் நிறுத்தப்பட்ட ரயில்கள் படிப்படியாக இயக்கப்படுகிறது. அதேநேரத்தில், சில ரயில்கள் இதுவரை இயக்கப்படவில்லை. கொரோனா பொது முடக்கத்திற்கு முன்பு சுற்றுவட்ட பாதையில் இயக்கப்பட்ட 2 ரயில்கள் நிர்வாக காரணங்களால் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த 2 ரயில்களை சென்னை கடற்கரை - செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - அரக்கோணம் மார்க்கமாகவும், மற்றொரு ரயிலை சென்னை கடற்கரை - அரக்கோணம் - காஞ்சிபுரம் - செங்கல்பட்டு வரையும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், திருப்பதி பயணிகள் ரயில் விரைவு ரயிலாக மாற்றப்பட்டதால் செங்கல்பட்டு - அரக்கோணம் இடையே ரெட்டிப்பாளையம், வில்லியம்பாக்கம், பழைய சீவரம், நத்தப்பேட்டை, தக்கோலம் ரயில் நிறுத்தங்கள் நீக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த வழித்தடத்தில் செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது, சென்னை பெருநகர விரிவாக்கத்தில் இந்தப் பகுதிகள் இணைக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கேற்ற போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த தெற்கு ரயில்வே நிர்வாகத்தின் வாயிலாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.