சென்னை: மண்ணடியில் காதல் மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஆசிப் (45), பிரியங்கா பாட்லா (39) ஆகியோர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்தனர். இருவரின் வீட்டிலும் எதிர்ப்பு இருந்ததால் ஒடிசாவில் இருந்து தப்பி சென்னைக்கு வந்தனர். தற்போது, ஆசிப் சென்னை மண்ணடி பிவி கோயில் தெருவில் வசித்து வருகிறார்.
மயிலாப்பூரில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிகிறார். பிரியங்கா பாட்லா போரூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், மனைவி அடிக்கடி செல்போனில் பேசுவது, சாட் செய்வது, வேலை பளு காரணமாக வீட்டிற்கு தாமதமாக வருவது என இருந்துள்ளார். இதனால், மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த ஆசிப், அடிக்கடி பிரியங்காவுடன் தகராறு செய்து வந்துள்ளார்.
நேற்று வழக்கம்போல் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ஆசிப் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். தகவலறிந்த முத்தியால்பேட்டை இன்ஸ்பெக்டர் செரீப் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரியங்கா பாட்லா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் ஆசிப்பை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.