×

தம்பி அல்லு சிரிஷின் பேச்சை கேட்டு கண்ணீர் விட்டு அழுத அல்லு அர்ஜுன்

ஐதராபாத்: தனது தம்பியும் நடிகருமான அல்லு சிரிஷின் பேச்சை கேட்டு கண்ணீர் விட்டு அழுதார் அல்லு அர்ஜுன். தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் அல்லு அரவிந்தின் மகன்கள் அல்லு அர்ஜுன், அல்லு சிரிஷ். இதில் அல்லு அர்ஜுன் தெலுங்கு திரைப்பட ஸ்டார் நடிகராக உள்ளார். ஆனால் அல்லு சிரிஷ், தனது அண்ணனை போல் சினிமாவில் ஜொலிக்கவில்லை. தமிழில் கவுரவம் படத்தில் இவர் ஹீரோவாக நடித்துள்ளார். தெலுங்கில் இவர் நடித்த பல படங்கள் தோல்வி அடைந்தன. இந்நிலையில் தமிழில் ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் நடிப்பில் வெளியான படம் பியார் பிரேமா காதல். இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. ஊர்வசிவோ ராட்சசிவோ என்ற தலைப்பில் இந்த படத்தை ராகேஷ் சசி இயக்கியுள்ளார்.

இதில் அல்லு சிரிஷுடன் அனு இமானுவேல் நடித்துள்ளார். இந்த படத்துக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து படத்தின் வெற்றி விழா ஐதராபாத்தில் நடந்தது.
இதில் பேசிய அல்லு சிரிஷ், ‘தொடர் தோல்விகளால் நான் துவண்டு போயிருந்தேன். காயத்தில் மேலும் வலியை ஏற்படுத்துவதுபோல், சமூக வலைத்தளங்கில் என்னை ட்ரோல் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். இதனால் மனதளவில் அழுதுகொண்டிருந்தேன். அப்போதெல்லாம் எனக்கு பக்கபலமாக இருந்தது அண்ணன் அல்லு அர்ஜுன்தான்’ என அல்லு சிரிஷ் உருக்கமாக பேசிக்கொண்டிருந்தபோது, அல்லு அர்ஜுன் கண்களில் கண்ணீர் வர ஆரம்பித்துவிட்டது. அடிக்கடி அதை துடைத்தபடி தம்பியின் பேச்சை கேட்டு அவர் உருகிப்போனார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


Tags : Allu Arjun ,Allu Sirish , Allu Arjun, brother of Allu Sirish, cried after hearing the speech
× RELATED செக் மோசடி வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் கைது..!!