சென்னை: பணியில் இருக்கும்போது இயற்கை எய்திய பத்திரிகையாளர்கள் 3 பேர் குடும்பங்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.3 லட்சத்தை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார். செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் பத்திரிகையாளர் நல வாரியகூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பத்திரிகையாளர் நல வாரியத்தின் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும், பத்திரிகையாளர் ஓய்வூதியம் கோரி வரப்பெற்ற விண்ணப்பங்களும் மற்றும் பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதி கோரி வரப்பெற்ற விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டன. பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதி திட்டத்தின் கீழ், பணியில் இருக்கும்போது இயற்கை எய்திய பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து மறைந்த பி.சுந்தரவடிவேல், சு.ராமகிருஷ்ணன், கே.ராஜேந்திரகுமார் ஆகியோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சத்திற்கான காசோலையை செய்தித்துறை அமைச்சர் வழங்கினார். இந்த கூட்டத்தில், செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் ஜெயசீலன், கூடுதல் இயக்குநர் (செய்தி) சரவணன், கூடுதல் இயக்குநர் (மக்கள் தொடர்பு) அன்புச்சோழன், பத்திரிகையாளர் நல வாரியத்தின் அலுவல்சாரா உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.