பேரணாம்பட்டு: வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு தரைக்காடு பகுதியில் 500க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் பயங்கர வெடி சத்தத்துடன் நிலஅதிர்வு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் நிலநடுக்கம் வந்ததாக பீதியடைந்து வீட்டை விட்டு உடனடியாக வீதியில் தஞ்சமடைந்தனர். இந்த அதிர்வால் தரைக்காடு பகுதியில் ஒரு சிலரது வீடுகளில் லேசான விரிசல் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து வருவாய் துறையினர் சென்று விசாரணை நடத்தினர். இதுகுறித்து வருவாய் துறை அதிகாரிகள் கூறுகையில், வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு குடியாத்தம், பேரணாம்பட்டு பகுதிகளில் அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டது. அப்போது, ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவாகி இருந்தது. தமிழக- ஆந்திர எல்லையில் பெய்த கனமழை காரணமாக பேரணாம்பட்டு மற்றும் குடியாத்தம் பகுதியில் பூமிக்குள் தண்ணீர் அதிகமாக ஊறியதால், லேசான நிலஅதிர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றனர்.