சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆய்வுக் கூட்டம் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்தும், இத்துறையில் வெளியிடப்பட்ட பல்வேறு அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்தும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவுப் பணியிடங்களை நிரப்புதல், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைகள் உரிய காலத்தில் மாணவர்களுக்கு வழங்குதல், வீடற்ற ஆதிதிராவிடர்களுக்கான இலவச வீட்டுமனைப் பட்டா திட்டத்தின் கீழ், விண்ணப்பங்கள் பெறப்பட்டு நிலுவையில் உள்ள பயனாளிகளுக்கு உடனடியாக வீட்டுமனைப் பட்டாக்களை வழங்குதல், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உரிய முறையில் அமல்படுத்துதல், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் குடியிருப்புகளில் செயல்படுத்தப்பட்டு வரும் அடிப்படை உட்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள், பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் மற்றும் கட்டுமானப் பணிகள் ஆகியவை குறித்து ஆய்வு செய்த அமைச்சர், இப்பணிகளின் பயன் அதிகளவில் மக்களை விரைந்து சென்றடைவதை உறுதி செய்திடுமாறு வலியுறுத்தினார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தென்காசி சு ஜவகர், இ.ஆ.ப., ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கூடுதல் செயலாளர் திரு. எஸ். பழனிசாமி, இ.ஆ.ப., ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் திரு த.ஆனந்த், இ.ஆ.ப., தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) மேலாண்மை இயக்குநர் திரு.கே.எஸ்.கந்தசாமி , இ.ஆ.ப., சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் உதவி காவல்துறை தலைவர் திருமதி. பி.ஆர்.வெண்மதி, இ.கா.ப., பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் திரு.ச.அண்ணாதுரை, ம.தொ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.