×

அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட மூல வைகை அணை திட்டம் நிறைவேற்றப்படுமா?

* சுற்றுலாத்தலமாக்கினால் வருவாய் ஈட்டலாம் * வருசநாடு பகுதி மக்கள் எதிர்பார்ப்பு

வருசநாடு : கடந்த 2021ம் ஆண்டு மே 7ம் தேதி தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் முதல்முறை பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் பதவியேற்ற காலகட்டம் தமிழகம் பெரும் தள்ளாட்டத்தில் இருந்தது. கொரோனா பெருந்தொற்று, பருவமழை பாதிப்புகள், நிதிச்சுமை என நெருக்கடிகள் அடுத்தடுத்து வந்தன. அவற்றே செம்மையாக ஒருபக்கம் கையாண்டு கொண்டே, மறுபுறம் மக்கள் நலத்திட்டங்களை அமல்படுத்தினார். அதுவும் முதல் நாளில் இருந்தே களப்பணியை தொடங்கி விட்டார். அவற்றில் மக்களின் அடிப்படை தேவைகளுக்கான மேம்பாட்டிற்காக செய்த விஷயங்கள் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளன. இதில் பல்வேறு திட்டங்கள் நாட்டிற்கே முன்னுதாரணமாக திகழ்கிறது.

தேனி மாவட்டத்தில் போடி, கம்பம், சின்னமனூர், ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.குறிப்பாக மக்களின் அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. நீர்நிலைகளை பராமரித்து சீரமைக்கும் பணிகள், விளைநிலங்களுக்கு செல்ல சாலை அமைக்கும் பணிகள்,சாலை விரிவாக்க பணிகள், பாதாள சாக்கடை பணிகள், வாறுகால் கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பணிகள் உள்ளிட்ட பணிகள் கடந்த அதிமுக ஆட்சியில் ஆமை வேகத்தில் இருந்ததாகவும், தற்போது ராக்கெட் வேககத்தில் படுஜோராக நடந்து வருகிறது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் தொடர்மழையால், தேனி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நதிகள், குளங்களில் தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது. அதிலும், சுருளி அருவி, சின்ன சுருளி அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அதுபோல் வைகை அணை, சண்முகா நதி அணை போன்ற அணைகளில் தண்ணீர் நிரம்பி கடல்போல் காட்சியளிக்கிறது.தேனி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியும் இயற்கை பூமியின் சொர்க்கபுரியாக திகழ்கிறது.

இங்குள்ள வருசநாடு பகுதி, மேகமலை போன்ற பகுதிகள் மலையும், மழையும் சார்ந்த இடம் என்று கூட கூறலாம். அந்தளவுக்கு சிலிர்க்க வைக்கும் சிகரங்கள், தேடி வந்து கொட்டும் மழைச்சாரல் என இயற்கை வளம் இங்கு கொட்டிக் கிடக்கிறது.தேனி மாவட்டத்தில் 30 சதவீத மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களையே தங்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ளதால், விவசாயமே மாவட்ட பொருளாதாரத்தின் மிக முக்கியமான பிரிவாக விளங்குகிறது.

தேனி மாவட்டத்தில் விவசாய பாசனம் மற்றும் பொதுமக்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது மூல வைகை ஆறு. இப்பகுதியில் அதிமுக காலத்தில் மூல வைகை அணை திட்டத்தை ஆய்வு செய்து வாலிப்பாறை மலைப்பகுதிக்கு இடைப்பட்ட மலைக்கிராம பகுதிகளில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அதன்பின், அதிமுக ஆட்சியின் அலட்சியபோக்கால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டதால் இப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

மேலும் ஒவ்வொரு ஆண்டும் மழை காலங்களில் வருகின்ற ஆற்று தண்ணீர் இப்பகுதிகளில் தேவையற்ற நிலையில் செல்வதாகவும் இப்பகுதி விவசாயிகள் ஒவ்வொரு நாளும் புலம்பி வருகின்றனர், மேலும் தண்ணீரை பாதுகாப்பதற்கும் புதியதாக மூல வைகை அணை கட்ட வேண்டும் என இப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இப்பகுதி விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கிணற்று நீர் பாசனங்கள் ஆழ்துளை கிணற்றுப் பாசனங்கள் இதுபோன்ற பாசங்களின் மூலம் மிகவும் பாதிப்படைந்து விவசாயம் செய்ததாகவும் கூறினர். இதனை தொடர்ந்து டெல்லி, சென்னை, போன்ற பகுதிகளிலிருந்து சிறப்பு குழு ஒன்று மூல வைகை ஆற்றை சில ஆண்டுகளுக்கு முன்பு ஆய்வு பணியை மேற்கொண்டது.
ஆனால் விரைவில் இந்த திட்டத்தின் மூலம் புதிய மூல வைகை அணை திட்டத்தை நிறைவேற்றி விடுவோம் என அதிகாரிகள் கூறி சென்றனர்.

ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்ைல. மேலும் இப்பகுதி பொதுமக்கள் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக செய்து வருகிறார்கள்.இப்பகுதியில் மலையும் மலை சார்ந்த 200க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளது மேலும் மூல வைகை ஆற்றில் புதிய அணை கட்ட வேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.

இதுகுறித்து வருசநாடு பகுதி மக்கள் கூறுகையில், ‘‘கடமலை மயிலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 18 ஊராட்சிகள் உள்ளது. இந்த ஊர்களில் பல கண்மாய்கள் அதிகளவில் உள்ளது. இந்த கண்மாய்களுக்கு மூல வைகை ஆற்றில் இருந்து கால்வாய் அமைத்து தண்ணீரை கொண்டு சென்றால் இப்பகுதிகளில் எப்போதும் குடிநீர் பஞ்சம் வரவே வராது.

இதற்கு பல முறை அதிமுக ஆட்சி காலத்தில் பொதுமக்கள் தகவல் சொல்லியும் எவ்வித செயல்பாடும் இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’ என்றனர்.
தும்மக்குண்டு முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஜெகன் கூறுகையில், ‘‘கடமலை மயிலை ஒன்றியத்தில் மழைக்காலங்களில் மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகம் ஏற்படுகிறது. ஆனால் தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. எனவே, இப்பகுதிகளில் ஒவ்வொரு விவசாயிகளும் பொதுமக்களும் பயன்படுமாறு மூல வைகை அணை திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

அவ்வாறு செய்தால் கடமலை மயிலை ஒன்றியத்தில் எப்போதும் குடிநீர் பஞ்சம் வராது. மேலும் இப்பகுதி மாபெரும் சுற்றுலாத்தலமாக அரசு அமைத்தால் பல லட்சம் ரூபாய் வருவாயையும் ஈட்ட முடியும்,’’ என்றார்.இதுகுறித்து ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன் கூறுகையில, ‘‘ இது சம்பந்தமாக தமிழக முதலமைச்சரிடம் பேசி முறையான பணிகள் நடைபெறும். அதற்காக திமுக அரசு உறுதுணையாக இருக்கும்’’. என்றார்.

Tags : vaiga dam , Varusanadu: On May 7, 2021, M. K. Stalin took charge as the Chief Minister of Tamil Nadu for the first time. He was sworn in
× RELATED அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட...