கோத்தகிரி : கோத்தகிரியில் கேரட் விளைச்சல் அதிகரித்து உள்ளது. இதனால் கொள்முதல் விலை கடந்த மாதத்தை ஒப்பிடுகையில் பாதியாக குறைந்துள்ளதால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. அதற்கு அடுத்தபடியாககாய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். தொழிலாளர் பற்றாக்குறை, விதை, இடுபொருட்கள் மற்றும் உரங்களின் விலை ஏற்றம், வனவிலங்குகள் தொல்லை உள்ளிட்டவற்றை எதிர்கொண்டு வங்கி கடன் பெற்று விவசாயிகள் காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர்.
கோத்தகிரி பகுதியில் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் காய்கறி பயிர்கள் செழித்து வளர்ந்து பசுமையாக காட்சி அளிக்கின்றன.
தற்போது கேரட் விளைச்சல் அதிகரித்து அறுவடைக்கு தயாராக உள்ளது, கேரட் கிலோ ஒன்று கடந்த செப்டம்பர் மாதத்தில் ரூபாய் 90 முதல் ரூபாய் 100 வரை கொள்முதல் செய்யப்பட்டது. இந்த மாதம் சராசரியாக 30 முதல் 50 ரூபாய் வரை மட்டுமே மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
வடகிழக்கு பருவமழை அவ்வப்போது பெய்வதால் தண்ணீர் தேங்கும் தோட்டங்களில் கேரட் அழுகத் துவங்கியுள்ளது, பருவ மழை தீவிரம் அடையும் முன் உடனுக்குடன் அறுவடை செய்து விற்க வேண்டிய சூழல் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.