×

அமெரிக்காவில் இடைக்கால தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறு: நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்த வாக்காளர்கள்..!!

வாஷிங்டன்: அமெரிக்காவில் இடைக்கால தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில் யார் அதிபராக தேர்வு செய்யப்பட்டாலும் அவரது 4 ஆண்டு பதவிக்கால மத்தியில் நாடாளுமனறத்திற்கு தேர்தல் நடத்தப்படும். அதிபர் பதவியேற்ற 2 ஆண்டுகளுக்குப் பின் நடைபெறும் இந்த தேர்தல் இடைக்கால தேர்தல் என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிபராகி 2 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும் நிலையில், இடைக்கால தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க நாடாளுமன்ற கீழ் சபையான பிரதிநிதி சபைகளில் உள்ள 435 இடங்களுக்கும், செனட் சபையில் மொத்தமுள்ள 100 இடங்களில் 35 இடங்களுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது.

இந்த தேர்தலில் 5 அமெரிக்க வாழ் இந்தியர்களும் போட்டியிட்டுள்ளனர். பென்சில்வேனியா, கலிபோர்னியா, ஒஹியோ, வட கரோலினா உள்ளிட்ட பல மாகாணங்களில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். ஃபுளோரிடாவில் உள்ள வாக்கு மையத்தில் முன்னாள் அதிபர் டிரம்ப், அவரது மனைவி மெலினா டிரம்ப் ஆகியோர் வாக்களித்தனர். பின்னர் பேசிய டிரம்ப், இடைத்தேர்தல் மிக முக்கியமான தேர்தலாக இருக்கும் என்று தெரிவித்தார். வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குகள் இன்றே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இடைக்கால தேர்தல் முடிவுகள் என்பது தற்போதைய அதிபர் எவ்வாறு செயல்படுகிறார் என்பதை மக்கள் தரும் இடைக்கால தீர்ப்பாக இருக்கும். மேலும் இந்த தேர்தலில் பெரும் வெற்றி 2024ம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் எந்த கட்சி வாகை சூடும் என்பதற்கு அச்சாரமாக அமையும் என கருதப்படுகிறது. அதனால் இடைத்தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

Tags : US , United States, midterm elections, voting, voters
× RELATED அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய...