கோத்தகிரி: கோத்தகிரியில் இருளர் சமூதாய மாணவி நீட் தேர்வில் வெற்றி பெற்று, நெல்லை அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே தும்பிபெட்டு இருளர் கிராமத்தைச் சேர்ந்த பாலன், ராதா தம்பதியின் மகள் ஸ்ரீமதி. இங்குள்ள தனியார் பள்ளியில் 2019ல் பிளஸ்-2 முடித்தார். தனது டாக்டராகும் கனவை நனவாக்க நீட் தேர்வு எழுதினார். அதில் எதிர்பார்த்த கட்-ஆப் மார்க் இல்லாததால் மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைக்கவில்லை. ஆனாலும் நீட் தேர்வுக்கான பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு படித்தார்.
4-வது முறையாக 2022ல் நடந்த நீட் தேர்வில் 370 மார்க் எடுத்து தேர்ச்சி பெற்றார். திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரியில் அவருக்கு இடம் கிடைத்துள்ளது. இது குறித்து ஸ்ரீமதி கூறுகையில், ‘‘டாக்டராகி ஏழை, எளிய மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதுதான் என் குறிக்கோளாக இருந்ததால் 4வது முறையாக நீட் தேர்வு எழுதி 370 மார்க் எடுத்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைத்துள்ளது’’ என்றார். அவரை நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.