×

18 வயது நிரம்பியவர்கள் பெயர்களை சேர்க்க 1 மாதம் சிறப்பு முகாம் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. பெயர் சேர்க்க ஒரு மாதம் சிறப்பு முகாம் நடைபெறுகிறது என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 6 கோடியே 36 லட்சத்து, 25 ஆயிரத்து, 813ஆக இருந்தது. இதில் ஆண் வாக்காளர்கள் 3,12,26,759, பெண் வாக்காளர்கள் 3,23,91,250 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 7,804 பேர் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.
தற்போது வரை3.42 கோடி வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலுடன் இணைக்க, தங்கள் ஆதார் எண்களை வழங்கி உள்ளனர்.

இது 55.37 சதவீதம்். கள்ளக்குறிச்சி, அரியலுார், தர்மபுரி மாவட்டங்களில், 80% அதிகமானோர், ஆதார் எண் வழங்கி உள்ளனர். மிகக் குறைவாக சென்னையில் 20 சதவீதம் பேர் மட்டுமே வழங்கி உள்ளனர். நகர்ப்புறங்களில் குறைவாகவும், ஊரகப் பகுதிகளில் அதிகமாகவும் வாக்காளர்கள் ஆதார் எண் வழங்கி உள்ளனர்.  மொத்தம் 31 மாவட்டங்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்காளர்கள், ஆதார் எண் அளித்துள்ளனர். ஆதார் இணைக்கும் பணி 2023ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி வரை நடைபெறும். இந்த நிலையில், இன்று (9ம் தேதி) வரைவு வாக்காளர் பட்டியலை தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் வெளியிடுகிறார்கள். சென்னையில், மாநகராட்சி ஆணையர் இன்று காலை வெளியிடுவார். தமிழகம் முழுவதும் மொத்த வாக்காளர்களின் விவரத்தை மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிடுகிறார்.

இன்று வரைவு வாக்காளர் பட்டியலில் வெளியிடப்பட்டதை தொடர்ந்து, 2023ம் ஆண்டின் ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1 ஆகிய தேதிக்குள் 18 வயதை அடைபவர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் வாக்காளராக பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தை முன்கூட்டிய சமர்ப்பிக்கலாம். இதற்கு ஏற்ப, இன்று (9ம் தேதி) முதல் 8-12-2022 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அலுவலகம் செல்பவர்கள் வசதிக்காக வருகிற 12, 13 (சனி, ஞாயிறு) மற்றும் 26, 27 (சனி, ஞாயிறு) ஆகிய 4 நாட்கள் தமிழகம் முழுவதும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இதையடுத்து இறுதி வாக்காளர் பட்டியல் 5-1-2023 அன்று வெளியிடப்படும்.முன்னதாக, தமிழகத்தில் வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட உள்ள நிலையில், 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளர் பட்டியலில் சேர்வதை உறுதிபடுத்தவும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ‘வாக்காளர்களை விட்டு செல்ல வேண்டாம்’ என்ற தலைப்பில் சென்னையில் இன்று பேரணியை சத்யபிரதா சாகு இன்று காலை 9 மணிக்கு மயிலாப்பூரில் உள்ள செவித்திறன் குறைபாடுள்ள சிஎஸ்ஐ மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி வைக்கிறார்


Tags : Tamil Nadu ,Chief Electoral Officer , 18 years old, to add name, 1 month special camp, voter list, publication, Tamil Nadu chief election, officer information
× RELATED தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி...