×

விபரீதமாக மாறியது இன்ஸ்டாகிராம் நட்பு திருமணமான பெண் ரவுடியுடன் ஓட்டம்: மனமுடைந்த கணவர் தற்கொலை முயற்சி

பெரம்பூர்: சென்னை ஓட்டேரி சரத்பவன் தெரு பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (29). இவருக்கு 9 வருடங்களுக்கு முன்பு சிவரஞ்சனி (27) என்ற பெண்ணுடன் திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் சிவரஞ்சனி அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோக்கள் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இதுகுறித்து பலமுறை அவரது கணவர் வினோத்குமார் எச்சரிக்கை செய்தும், தொடர்ந்து சிவரஞ்சனி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிலருடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் வெளியே சென்ற சிவரஞ்சனி மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்த கணவர் வினோத்குமார், ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

வழக்கு பதிவு செய்த ஓட்டேரி இன்ஸ்பெக்டர் ஜானி செல்லப்பா நடத்திய விசாரணையில், சிவரஞ்சனி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓட்டேரி நாராயண மேஸ்திரி தெருவை சேர்ந்த லோகேஷ் (23) என்ற நபருடன் பழகி வந்ததும், காணாமல்போன அன்று அவருடன் சென்றதும் தெரியவந்தது. லோகேஷ் மீது ஓட்டேரி காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இதனையடுத்து போலீசார் சிவரஞ்சனியை தேடி வருகின்றனர். இந்நிலையில், மனைவி ரவுடியுடன் சென்ற தகவலறிந்த வினோத்குமார் நேற்று மாலை வீட்டில் இருந்த பினாயிலை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக ஓட்டேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Instagram , Instagram-friendly married woman's run-in with rowdy turned ugly: Distraught husband attempts suicide
× RELATED படப்பிடிப்பில் பிரியங்கா சோப்ரா படுகாயம்