×

போதையில் தள்ளாடிய கணவன் உதறியதால் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிக்கி மனைவி பரிதாப பலி: திரிசூலத்தில் சோக சம்பவம்

பல்லாவரம்: திரிசூலம் ரயில் நிலையத்தில் மதுபோதையில் தள்ளாடிய கணவனின் கையை பிடித்து தண்டவாளத்தை கடக்க முயன்ற மனைவி எக்ஸ்பிரஸ் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். போதையில் கணவன் அவரது கையை பிடித்து உதறி விட்டதால் இந்த சோக சம்பவம் நிகழ்ந்தது. காஞ்சிபுரம் மாவட்டம், மணப்பாக்கம், தர்மராஜா கோயில் தெருவை சேர்ந்தவர் சம்பத் (45). இவரது மனைவி கலைச்செல்வி (40). நேற்று முன்தினம் கணவன், மனைவி இருவரும் பல்லாவரம் அடுத்த திரிசூலம் பகுதியில் தனது உறவினர் பெண்ணுக்கு நடசீமந்தம் நிகழ்ச்சி நடைபெறவே, அதில் கலந்து கொள்வதற்காக ரயிலில் திரிசூலம் வந்திருந்தனர்.

அப்போது, சம்பத் அளவுக்கதிகமான மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. நிதானம் இல்லாமல் தள்ளாடிக் கொண்டிருந்த அவரை, மனைவி கலைச்செல்வி கையை பிடித்து இரும்பு பாதையை கடந்துசெல்ல முற்பட்டார். அப்போது மனைவியுடன் செல்ல மறுத்த சம்பத் அவரது கையை உதறிவிட்டார். இதில், நிலை குலைந்த கலைச்செல்வி மீது, அந்த வழியாக சென்ற விரைவு ரயில் ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் பலமாக மோதியது. இதில் படுகாயமடைந்த கலைச்செல்வி, கணவன் கண்ணெதிரிலேயே துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து, தாம்பரம் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்தது சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே போலீசார், இறந்த கலைச்செல்வி உடலை மீட்டு அதனை பிரேத பரிசோதனைக்காக சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவனின் மதுபோதையால், மனைவி ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Trisulam , Wife trapped in express train as drunken husband stumbles: Tragic incident in Trisulam
× RELATED ஏரியில் தவறி விழுந்து கூலி தொழிலாளி பலி