லால்குடி : திருச்சி அருகே நடைபயிற்சி சென்ற கேபிள் டிவி உரிமையாளர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். 6 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த நெறிஞ்சலக்குடியை சேர்ந்தவர் மாதவன்(48). கேபிள் டிவி உரிமையாளர். இவரது மனைவி மஞ்சுளாதேவி(39). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று மாதவன் கைலாஷ் நகர் பகுதியில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை வழிமறித்த 6 பேர் கும்பல், சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடினர். இதில் தலை, முகம், கழுத்து உள்ளிட்ட இடங்களில் வெட்டு விழுந்ததில் ரத்த வெள்ளத்தில் மாதவன் சம்பவ இடத்திலே இறந்தார்.இதுபற்றி தகவலறிந்த லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் மாதவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருச்சி மாவட்ட எஸ்பி சுஜித்குமார், லால்குடி டிஎஸ்பி சீத்தாராமன் ஆகியோர் சம்பவம் நடந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். திருச்சியில் இருந்து நீலி என்ற மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சிறிதுதூரம் ஓடி நின்றது. இதுகுறித்து லால்குடி போலீசார் வழக்கு பதிந்து தொழில் போட்டியால் முன் விரோதமாக கொலை நடந்ததா என்ற ேகாணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.