×

தொழில் வளர்ச்சி 4.O மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து..!

சென்னை: தொழில் வளர்ச்சி 4.O மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை டைடல் பார்க்கில், தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் சார்பில்  நடைபெற்ற “நாளையை நோக்கி இன்றே - தலை நிமிர்ந்த தமிழ்நாடு “ எனும்  தொழில் வளர்ச்சி - 4.0 மாநாட்டில்  கலந்து கொண்டு TANSAM மற்றும் TAMCOE ஆகிய நிறுவனங்களின் சிறப்பு மையங்களைத் திறந்து வைத்து, தமிழ்நாடு விண்வெளி மற்றும் பாதுகாப்புக் கொள்கை 2022-யை  வெளியிட்டார்.

பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்திய அளவில்  பொருளாதாரத்தில் இரண்டாவது பெரிய மாநிலமாக தமிழ்நாடு திகழ்கின்றது. முதலீடுகளை பெருமளவில் ஈர்த்து, இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கிடவும்,  மாநில பொருளாதாரத்தை வலுவடையச் செய்திடவும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நிர்ணயித்துள்ள 2030-31 ஆம் நிதியாண்டிற்குள் தமிழ்நாட்டினை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சி என்ற இலக்கினை அடைந்திடவும் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

தமிழ்நாடு வான்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில் கொள்கை, 2022-ஐ, முதலமைச்சர் வெளியிட்டார். இக்கொள்கை மூலம், மாநிலத்தில் உற்பத்தி மேற்கொள்ளும் வான்வெளி மற்றும் பாதுகாப்பு முதலீட்டாளர்களுக்கு சிறப்பான ஊக்கத்தொகுப்புச் சலுகை அளிக்கப்பட்டு, இத்துறையின் வளர்ச்சி ஊக்குவிக்கப்படும். குறிப்பாக, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்களுக்கு, இக்கொள்கை பெருமளவில் ஆதரவு வழங்கிடும்.  இக்கொள்கையின் மூலம் 10 ஆண்டு காலகட்டத்திற்குள் வான்வெளி மற்றும் பாதுகாப்பு துறையில் 75 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குதல் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  

டிட்கோ மற்றும் சீமென்ஸ் நிறுவனங்கள் இணைந்து, 251.54 கோடி ரூபாய் செலவில் டைடல் பார்க்கில் அமைத்துள்ள “TANSAM”, மேம்பட்ட உற்பத்திக்கான திறன்மிகு மையத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார். வான்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை, மின் வாகனங்கள், தொழில் இயந்திரங்கள், கடல்சார் தொழில்நுட்பம் பசுமை சக்தி மற்றும் பெட்ரோ கெமிக்கல், உயிரியல் தொழில் நுட்பத்துறை, தொழிற்சாலைகளின் தானியக்கம் சார்ந்த திட்டங்களுக்கு, ரோபாடிக்ஸ், உற்பத்திப் பொருட்களை இணையத்துடன் இணைக்கும் வளையமைப்பு, ஆக்மென்டட் ரியாலிட்டி/விர்ச்சுவல் ரியாலிட்டி/மிக்ஸ்டு ரியாலிட்டி, சேர்க்கை உற்பத்தி, டிஜிட்டல் டிவின்ஸ் போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களை வழங்கிடும் வகையில் TANSAM திறன்மிகு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இத்தகு திறன்மிகு மையம் நம் நாட்டில் முதல் முறையாக அமைக்கப்பட்டுள்ளது என்பது இதன் சிறப்பம்சம் ஆகும். டிட்கோ மற்றும் GE ஏவியேஷன் நிறுவனங்கள் இணைந்து, ரூபாய் 141 கோடி முதலீட்டில் உருவாக்கியுள்ள, 3D அச்சிடுதல் தொழில் நுட்பத்தில்,  உலகத் தரம் வாய்ந்த சேர்க்கை உற்பத்திக்கான TAMCOE திறன்மிகு மையத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார். GE ஏவியேஷன் நிறுவனத்தின் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை  உபயோகப்படுத்தி, சேர்க்கை உற்பத்தியின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டினை செம்மைப்படுத்திக் கொள்ள TAMCOE உதவும்.

மேலும், குறு, சிறு நிறுவனங்கள் / புத்தொழில்கள் / பல்கலைக்கழகங்கள் போன்றவற்றிற்கு சாத்தியக்கூறு ஆய்வுகள் / முன்மாதிரி சேர்க்கை பகுதிகள் (Prototype additive parts) போன்ற துறைகளில் ஆலோசனை சேவைகளும் வழங்கும். அறிவுசார் சொத்துரிமை மூலம் வான்வெளி மற்றும் பாதுகாப்புத் துறைகளின் பயன்பாடுகளுக்கான உலோக 3D அச்சிடுதல், மருத்துவம் மற்றும் மோட்டார் வாகனத் துறைகளில் அதிநவீன உற்பத்தித் தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்தி, அதன்மூலம் அத்துறைகளுக்கு ஒரு தனித்துவம் ஏற்படுத்தித் தருவது, TAMCOE-ன் முக்கிய நோக்கமாகும்.

கடந்த ஜூலை மாதம் “டஸோட் (Dassault)” நிறுவனத்தின் திறன்மிகு மையத்தை டைடல் பூங்காவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார். இந்த திறன்மிகு மையங்களில், தொழிலாளர்களுக்கும், தொழில் முனைவோர்களுக்கும், தொழிற்சாலைக்கு செல்லாமலே, அச்சூழலுக்கு ஏற்றவாறு மெய்நிகர் பயிற்சி அளிக்கப்படும். இந்த திறன்மிகு மையங்கள், முதலமைச்சர் தொலைநோக்கு பார்வையில் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுவரும் “நான் முதல்வன்” திட்ட நோக்கத்துடன் இணைந்து செயல்படும்.

மதுரை மற்றும் கோயம்புத்தூர் நகரங்களில் ரிமோட் பைலட் பயிற்சி மையங்களை  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார். தமிழ்நாடு அரசின்  டிட்கோ நிறுவனம், ஒன்றிய அரசின் இந்தியரா காந்தி ராஷ்ட்ரிய உடான் அகாடமி (IGRUA) மற்றும் DE Drone ஆகிய நிறுவனங்கள் இணைந்து, மதுரை மற்றும் கோயம்புத்தூர் நகரங்களில் நிறுவியுள்ள ரிமோட் பைலட் பயிற்சி மையங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

முதலமைச்சர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

* முதலமைச்சர் முன்னிலையில், தொழில்துறை, தொழில்துறை கூட்டமைப்பு, மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் (Accurate Forgings, Hexsor, ADROITS, AIEMA, HOSTIA, AMET, Karpagam Group, Hindustan Group of Institutions, Sriher (Sri Ramachandra), TANCAM புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

* முதலமைச்சர் முன்னிலையில், Fabheads, MaxByte, Primeam ஆகிய நிறுவனங்களுடன் TAMCOE புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டன.

* TIDCO நிறுவனமும், GTN நிறுவனமும் இணைந்து பொது வசதி மையம் (Common Testing Facility) அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.

* வான்வெளி மற்றும் பாதுகாப்புத் துறையில், வெப்ப சிகிச்சை (Heat treatment), மேற்பரப்பு பூச்சு (Surface coating) மற்றும் வான்வெளி உபகரணங்களின் பிந்தைய செயலாக்கம் (Post Processing) போன்றவற்றிற்கான வசதிகளை அமைக்க அதிகம் செலவாகும். இந்த பொது வசதி மையங்கள் (Common Facility Centres) அமைக்கப்படுவதன் மூலம், தொழிலகங்களுக்கான உற்பத்தி செலவினங்கள் வெகுவாக குறைக்கப்பட்டு, உற்பத்தித் திறன் பன்மடங்கு உயர்ந்திட வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

* தமிழ்நாடு அரசின் டிட்கோ நிறுவனம் மற்றும் ஒன்றிய அரசின், இந்திரா காந்தி ராஷ்ட்ரிய உடான் அகாடமி (IGRUA), DE Drone நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

* சமீப காலங்களில், விவசாயம், சட்டம் ஒழுங்கு, பாதுகாப்பு போன்ற பல்வேறு துறைகளில் Drone எனப்படும் ஆளில்லா விமானங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இப்பயிற்சி மையங்கள் மூலம் மாதம் 200 மாணவர்கள் என்ற விகிதத்தில் பயிற்சி அளிக்கப்படும். ஒரு வருடத்திற்குள் சுமார் 2500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும் வாய்ப்பு உள்ளது. 


Tags : Chief Minister ,M.K.Stalin ,4.O , MOUs signed in the presence of Chief Minister M.K.Stalin at the industrial development 4.O conference..!
× RELATED தேசிய குடிமை பணியாளர்கள் நாள் முதல்வர் வாழ்த்து