×

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 648 இடங்களில் தேங்கியிருந்த மழை நீர் முழுவதும் வெளியேற்றம்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தகவல்

சென்னை: வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 648 இடங்களில் தேங்கி இருந்த மழை நீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறினார். இது குறித்துஅவர் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை மாநகராட்சி பகுதிகளில் கனமழை காரணமாக விழுந்த 71 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. 169 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில், மழை நீர் தேங்கியதால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் 29.10.2022 முதல் 05.11.2022 முடிய மொத்தம் 2,83,961 உணவு பொட்டலங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 648 இடங்களில் தேங்கி இருந்த மழை நீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டுள்ளது. அடுத்த 3 நாட்களுக்கான முன்னெச்சரிக்கை இந்திய வானிலை ஆய்வு மையம் மூலமாக வரப்பெற்றுள்ளது.

அதன்படி இன்று சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 9ம் தேதி (நாளை) பல இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 9ம் தேதி அன்று இலங்கைக்கு அருகே தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகக்கூடும். அதனால் வருகிற 10ம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

* சென்னை குடிநீர் ஏரியின் நிலவரம்
செம்பரம்பாக்கத்தில் மொத்த கொள்ளளவு 24 அடி. தற்போது 20.61 அடி இருக்கிறது. தற்போது செம்பரம்பாக்கத்துக்கு 19 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 713 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. அதேபோல, செங்குன்றம் (புழல்) ஏரியின் மொத்த கொள்ளளவு 21.20 அடி. தற்போது 18.73 அடியாக இருக்கிறது. தற்போது செங்குன்றம் ஏரிக்கு 165 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 292 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது என்று வருவாய் துறை அமைச்சர் கூறினார்.

Tags : Chennai Corporation ,Minister ,KKSSR ,Ramachandran , Drainage of accumulated rain water in 648 places under Chennai Corporation: Minister KKSSR Ramachandran informs
× RELATED தமிழகத்தில் 188 இடங்களில் தண்ணீர்...