சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 15 மீனவர்களுடன் கைப்பற்றப்பட்ட 2 விசைப் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையின் கட்டுப்பாட்டிலுள்ள 100 மீன்பிடி படகுகளை விடுவிக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்; தமிழகத்தை சேர்ந்த 15 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் நவம்பர் 5-ம் தேதி கைது செய்யப்பட்டுள்ளனர். 15 மீனவர்களுடன் கைப்பற்றப்பட்ட 2 விசைப் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக அரசு பலமுறை கோரிக்கை விடுத்த போதிலும், பாக்ஜல சந்திப்பில் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் இது பாரம்பரிய மீன்பிடிப் பகுதியை நம்பியிருக்கும் ஒட்டுமொத்த மீனவ சமூகத்தினரிடையே அச்சத்தையும், கோபத்தையும் ஏற்படுத்துகிறது எனவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய, தூதரக வழிமுறைகள் வாயிலாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், இலங்கை கட்டுப்பாட்டில் உள்ள 100 மீன்பிடிப் படகுகளை விடுவிக்கக்கோரியும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.