இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டின் பிரபலங்களை இந்திய ஹேக்கிங் கும்பல் உளவு பார்ப்பதாகவும், உரையாடல்களை இடைமறித்து கேட்பதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இந்தியா - பாகிஸ்தான் இடையிலான எல்லைப் பிரச்னைகள் இருந்து வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. இந்த சம்பவம் இந்திய அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில் ‘தி பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிசம்’ என்ற அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘பாகிஸ்தான் நாட்டின் அரசியல்வாதிகள், ராணுவ ஜெனரல்கள் மற்றும் தூதரக அதிகாரிகளுக்குச் சொந்தமான கம்ப்யூட்டர் மற்றும் அவர்களது ஆன்லைன் முகவரிகளை இந்தியாவைச் சேர்ந்த கணினி ஹேக்கிங் கும்பல் முடக்குகின்றன. அவர்கள் பிரபலங்களின் பதிவுகள் மற்றும் ஆன்லைன் உரையாடல்களை இடைமறித்து கேட்கின்றன.
இவையாவும் இந்திய உளவு அமைப்பின் பின்னணியில் செயல்படுத்தப்படுகிறது. கடந்த ஜனவரி 10ம் தேதி, அப்போதைய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஃபவாத் சவுத்ரியின் மின்னஞ்சல் கணக்கு முடக்கப்பட்டது. அதேபோல் சீனாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகங்கள், காத்மாண்டுவில் உள்ள தூதரகங்களையும் குறிவைத்து தாக்குகின்றனர்.
லண்டனுடன் தொடர்புடைய தனியார் புலனாய்வாளர்கள், இந்தியாவை சேர்ந்த கணினி ஹேக்கிங் கும்பலுடன் சேர்ந்து பணியாற்றுகின்றனர். ‘வைட்இன்ட்’ என்ற பெயரில் செயல்படும் ஹேக்கிங் கும்பல், இந்திய தொழில்நுட்ப நகரமான குர்கிராமின் புறநகர் பகுதியில் இருந்து இயங்குகிறது’ என்று தெரிவித்துள்ளது. மேற்கண்ட அறிக்கையின் அடிப்படையில் பாகிஸ்தான் ஊடகங்கள் ெசய்திகளை வெளியிட்டு வருகின்றன.