×

செல்போனில் படம் பார்ப்பதை கண்டித்ததால் தாத்தா, தாய், சகோதரி, உறவுப் பெண் படுகொலை: திரிபுராவில் 15 வயது சிறுவன் நடத்திய கொடூரம்

தலாய்: திரிபுராவில் செல்போனில் படம் பார்ப்பதை கண்டித்ததால், தாத்தா, தாய், சகோதரியை கொன்ற 15 வயது சிறுவன், பக்கத்து வீட்டு உறவுப் பெண்ணையும் கொடூரமாக கொன்று புதைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. திரிபுரா மாநிலம் தலாய் மாவட்டம் கமால்பூர் அடுத்த ஷிப் பாரி என்ற கிராமத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பாதல் தேப்நாத் (70), அவரது மருமகள் சுமிதா தேப்நாத் (42), பேத்தி சுபர்ணா தேப்நாத் (10) ஆகியோர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். சுமிதா தேப்நாத்தின் கணவர் வெளியூர் சென்றிருந்தார். அப்போது வீட்டில் இருந்த சுமிதா தேப்நாத்தின் 15 வயது மகன், தூங்கிக் கொண்டிருந்த தனது தாத்தா, தாய், சகோதரி ஆகியோரை திடீரென்று கழுத்தை அறுத்துக் கொலை செய்தான். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் ரேகா தேப் (32) என்பவர் வீட்டிற்குள் வந்தார்.

அப்போது வீட்டில் இருந்த ஒலி பெருக்கியின் இசையின் ஒலியை அதிகப்படுத்தினான். பின்னர் வீட்டிற்குள் நுழைந்த அந்த பெண்ணையும் வளைத்து போட்டு அவரையும் கழுத்தை அறுத்து கொன்றான். பின்னர் 4 பேரின் சடலங்களையும் வீட்டிற்கு வெளியே இழுத்துவந்து, அதே பகுதியில் குழியை தோண்டி புதைத்துவிட்டு தப்பிச் சென்றான்.

அடுத்த நாள் காலை அக்கம்பக்கத்தினர் சம்பவம் நடந்த வீட்டில் இருந்து எவரும் வெளியே வராததால் ஆச்சரியமடைந்தனர். வீட்டிற்குள் சென்று பார்த்த போது வீடு முழுவதும் ரத்தக் களறியாக இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை நடத்திய போது, வீட்டிற்கு வெளியே புதியதாக தோண்டப்பட்ட குழி மூடப்பட்டிருப்பதை பார்த்தனர். தொடர்ந்து மூடப்பட்டிருந்த குழியை மீண்டும் போலீசார் தோண்டி பார்த்த போது, அதற்குள் மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆணின் சடலம் இருந்தது. அதிர்ச்சியடைந்த அவர்கள் 4 சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கமால்பூர் துணைப் பிரிவு போலீஸ் அதிகாரி (எஸ்டிபிஓ) ரமேஷ் யாதவ் கூறுகையில், ‘கொலையான 4 பேரையும் (தாத்தா, தாய், சகோதரி, பக்கத்து வீட்டு உறவுப் பெண்) அதே குடும்பத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளான். தலைமறைவான அவனை கைது செய்துள்ளோம்.

தாத்தா, தாய், சகோதரியின் அழுகை சத்தம் வெளியே தெரியாமல் இருக்க வீட்டில் இருந்த சவுண்ட் பாக்ஸ் ஒலியை அதிக சத்தமாக வைத்தான். அப்போது வீட்டிற்குள் நுழைந்த மற்றொரு பெண்ணையும் கழுத்தை அறுத்து கொன்றான். செல்போனில் அடிக்கடி படம் பார்க்கும் பழக்கம் கொண்ட அவனை, பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. இந்த கொடூர கொலைக்கு இதுவே காரணமாக இருக்கலாம். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார்.


Tags : Tripura , Grandfather, mother, sister, female relative murdered for condemning them for watching movies on cell phones: 15-year-old boy's brutality in Tripura
× RELATED பாஜகவில் மீண்டும் சீட் தராததால்...