×

சென்னையில் மீண்டும் மழை தொடங்குவதற்குள் கால்வாய்களை தூர்வார நடவடிக்கை: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

சென்னை: சென்னை திருவிக நகர் மண்டல அலுவலகத்தில் பருவமழை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில், அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் ஆய்வு கூட்டம் நேற்று முன்தினம் மாலை  நடைபெற்றது. கூட்டத்தில், மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் கிர்லோஷ் குமார் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

பின்னர், தூய்மை பணியாளர்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு ரெயின் கோட் வழங்கினார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கொளத்தூர், திருவிக நகர் தொகுதியில் கட்டப்பட்டுள்ள கால்வாயில் தண்ணீர் தேங்காதவாறு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தேங்கும் மழைநீரை அகற்ற தேவையான மோட்டார்கள் வழங்குவது குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொசு மருந்து மற்றும் நோய்தடுப்பு நடவடிக்கைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தண்ணீர் தேங்கிய இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. வரும் காலங்களில் தண்ணீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும். 4 நாட்களுக்கு மழை இருக்காது என்பதால், அதற்குள் மழைநீர் வடிகால் மற்றும் கால்வாய்கள் தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் மழை அதிகமாக இருக்கும் என்பதால் ஏரிகள் நிரம்பிய நிலையில் இருக்க கூடாது என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தண்ணீர்  திறந்துவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Chennai ,Minister ,KN Nehru , Chennai, rains, canals, durwar activities, Minister K.N. Nehru, interview
× RELATED தொடர்ந்து தமிழகத்திற்கு வரும்...