×

கரு கலைந்ததை உறவினர்களிடம் தெரிவிக்காமல் 9 மாத கர்ப்பிணி போல் நடித்து பிரசவத்திற்கு வந்த இளம்பெண்: சிதம்பரம் அரசு மருத்துவமனையில் பரபரப்பு

சிதம்பரம்:  கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே குமராட்சியை சேர்ந்த 23 வயது இளம்பெண்ணுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. இவர் இரண்டு முறை கர்ப்பமாகி, கரு கலைந்து விட்டது. இதையடுத்து மூன்றாவது முறையாக கருவுற்றார். அதன்பின் அவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்க்க சென்று விட்டார். இந்நிலையில் மூன்றாவது முறையாக கரு கலைந்து போனதால் என்ன செய்வது என்று தெரியாமல் அப்பெண் தவித்துள்ளார்.

இந்த விவரம் கணவர் குடும்பத்தினருக்கு தெரிந்தால் தன்னை வெறுத்து ஒதுக்கி விடுவார்கள் என்ற பயத்தில் வயிற்றில் துணியை கட்டிக்கொண்டு 9 மாதங்களாக கர்ப்பிணி போல் நடித்துள்ளார். ஒவ்வொரு மாதமும் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து வருவதாக வீட்டில் கூறிவிட்டு வெளியே சென்று வந்துள்ளார்.

இதனையடுத்து குழந்தை பிறப்பதற்கான நேரம் வந்து விட்டதாக கூறி பிரசவம் பார்க்க சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.அவருடன்  தந்தை,  தாய், மாமியார் ஆகியோரும் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். மருத்துவமனையில் அந்த பெண்ணை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் கருத்தரிக்காமல் வயிற்றில் துணி வைத்து கர்ப்பிணிபோல் நடித்ததை கண்டுபிடித்துவிட்டனர்.

இதனிடையே வெளியே வந்த அப்பெண் தனது குடும்பத்தினரிடம் நான் கழிவறைக்கு செல்லும்போது குழந்தை கீழே விழுந்து இறந்துவிட்டதாக தெரிவித்தார். அப்போது, அங்கு வந்த மருத்துவமனை ஊழியர்கள், பெண்ணின் உறவினர்களிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்த சிதம்பரம் நகர மற்றும் மகளிர் போலீசார் சென்று அப்பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து ஆலோசனை வழங்கினர்.


Tags : Chidambaram Government Hospital , Fetus, cousin, 9 months pregnant, delivery, young girl, Chidambaram, Government Hospital, excitement
× RELATED சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம்