கள்ளக்குறிச்சி: கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூரில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு அமைதியான முறையில் நேற்று நடந்தது. தமிழகம் முழுவதும் 6ம் தேதி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடத்துவதற்கு அனுமதி கேட்டு இருந்தனர். இதில் கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர் ஆகிய 3 மாவட்டங்களில் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி வழங்கியது. இதனிடையே அணிவகுப்பை ஒத்திவைப்பதாக ஆர்எஸ்எஸ் அறிவித்தது. ஆனால் திட்டமிட்டபடி கள்ளக்குறிச்சியில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது.
ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் 300 பேர் கொடி ஏந்தியபடி, சேலம் மெயின்ரோடு பகுதியில் இருந்து கவரைதெரு, கச்சிராயப்பாளையம் சாலை, மீன்மார்க்கெட் வழியாக மந்தைவெளியில் நிறைவு செய்தனர். பின்னர் மந்தைவெளி பகுதியில் பொதுக்கூட்டமும் நடந்தது. விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன் தலைமையில் 3 மாவட்டங்களை சேர்ந்த ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
*கடலூர்
கடலூரில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு, கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சன்னதி தெருவில் உள்ள திருமணமண்டபத்தில் துவங்கியது. இதில் சேவகர்கள் சீருடை அணிந்தபடி 500 பேர் கலந்து கொண்டனர். அணிவகுப்பின் முடிவில் பொதுக் கூட்டம் நடந்தது. எஸ்பி சக்திகணேசன் தலைமையில் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
*பெரம்பலூர்
பெரம்பலூரில் ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் நேற்று மாலை அணிவகுப்பு நடைபெற்றது. பாலக்கரை அருகிலிருந்து புறப்பட்டு மேற்கு வானொலி திடலில் முடிந்தது. 30 சிறுவர்கள் உள்பட 200 பேர் கலந்து கொண்டனர். திருச்சி மத்திய மண்டல ஐஜி சந்தோஷ்குமார் தலைமையில், டிஐஜி சரவண சுந்தர் மேற்பார்வையில் 850 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 3 மாவட்டங்களிலும் எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி அணிவகுப்பு நடந்து முடிந்தது.