×

மயிலாப்பூர், திருவான்மியூர் உள்ளிட்ட சிவாலயங்களில் அன்னாபிஷேகம்: இன்று நடக்கிறது

சென்னை: மயிலாப்பூர், திருவான்மியூர் உள்ளிட்ட சிவாலயங்களில் அன்னாபிஷேகம் இன்று மாலை நடைபெறுகிறது. ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தில் நவக்கிரகங்களில் ‘சந்திரன்’ தனது சாபம் முழுமையாக தீர்ந்து, 16 கலைகளுடன், பூமிக்கு அருகில் வந்து முழு பொலிவுடன் காட்சி அளிக்கும். முழுமையான ஒளியுடன் இருக்கும் அன்றைய நாளில் சிவபெருமானுக்கு சிறப்பு வழிபாடு செய்வது சிறப்பாக கருதப்படுகிறது. சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி என்பதால், அன்று சிறப்பு வழிபாடாக அரிசியை வடித்து சோறாக மாற்றி ஈசனுக்கு லிங்க திருமேனியில் அன்னத்தல் அபிஷேகம் (அன்னாபிஷேகம்) செய்யப்படுகிறது.

இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில்:
இந்த ஆண்டு சந்திர கிரகணம் பவுர்ணமியில் வருவதால் கோயில்களில் இன்று அன்னாபிஷேகம் கொண்டாடப்படுகிறது. மாலை 4.53 மணிக்கு தொடங்கி வருகிற 8ம் தேதி மாலை 4.59 மணி வரை பவுர்ணமி திதி உள்ளது. பவுர்ணமியில் தான் அன்னாபிஷேகம் செய்ய வேண்டும் என்பது நியதி. ஆனால் இந்த ஆண்டு பவுர்ணமி அன்று சந்திரகிரகணம் வருகிறது.

எனவே தமிழகத்தில் உள்ள சிவாலயங்களிலும், குறிப்பாக சென்னையில் மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில், திருவொற்றியூர் தியாகராஜர் சுவாமி கோயில், திருவேற்காடு வேதபுரீசுவரர் கோவில் உள்ளிட்ட சிவாலயங்களில் இன்று அன்னாபிஷேகம் நடக்கிறது. பக்தர்கள் இன்று மாலையில் அன்னாபிஷேக தரிசனம் செய்யலாம். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சுவாமிக்கு அபிஷேகம் செய்த அன்னம், பிரசாதமாக வழங்கப்படும்,’’ என்றனர்.

Tags : Annabishekam in Mylapore, Thiruvanmiyur, Shivalayams,
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...