×

4 ஆண்டுக்கு முன் பெருவெள்ளத்தில் சேதமடைந்த திருச்சி கொள்ளிடம் பாலத்தை இடிக்கும் பணி துவக்கம்: 6 மாதத்திற்குள் முடிக்க திட்டம்

திருச்சி: பெருவெள்ளத்தில் சேதமான திருச்சி கொள்ளிடம் பழைய பாலத்தை முழுவதும் இடிக்கும் பணி நேற்று துவங்கியது. 6 மாதத்துக்குள்ளாக இப்பணிகளை முடிக்க நெடுஞ்சாலைதுறை திட்டமிட்டுள்ளது. திருச்சி திருவானைக்காவல்- நம்பர் 1 டோல்கேட் இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 1928ம் ஆண்டு 12.5மீ அகலம், 792 மீ நீளத்தில் 24 தூண்களுடன் பாலம் கட்டப்பட்டது. நீண்ட காலம் பயன்பாட்டில் இருந்து வந்த இப்பாலம் வலுவிழந்ததால், 2007 முதல் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

அதன் அருகில் ரூ. 88 கோடியில் சென்னை நேப்பியர் பால வடிவத்துடன் புதிய பாலம் கட்டப்பட்டு 2016 பிப்ரவரி 14ம்தேதி திறந்து வைக்கப்பட்டது. அதன்பின் அனைத்து வாகனங்களும் புதிய பாலத்தில் சென்று வரத்தொடங்கியதால் இந்த பழைய பாலத்தை பொதுமக்கள் நடைபயிற்சி செல்ல பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், கனமழை காரணமாக 2018 ஆகஸ்ட் 16ம்தேதி கொள்ளிடத்தில் பெருக்கெடுத்த பெருவெள்ளத்தில், பழைய பாலத்தின் 18, 19வது தூண்கள் அடித்து செல்லப்பட்டன.

அதன்பின், இப்பாலத்தின் உறுதித்தன்மை குறித்து ஐ.ஐ.டி. குழுவினர் ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை கொடுத்தனர். இதனைத்தொடர்ந்து, பாலத்தை முற்றிலுமாக அகற்ற நெடுஞ்சாலை துறையினர் திட்டமிட்டனர். ஆனால் சிலர், இப்பாலத்தை பழைமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என்றும், 90ஆண்டுகள் கடந்த நிலையில் அதை மறுசீரமைப்பு செய்வது வீண்செலவு என்று கருத்து தெரிவித்தனர். இதையடுத்து இந்த விவகாரம் நீண்டகாலமாக கிடப்பிலேயே போடப்பட்டிருந்தது. இதனிடையே கடந்த மாதம் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பாலத்தின் மற்றொரு தூண் சரிந்தது.

இந்நிலையில் கொள்ளிடம் பழைய பாலத்தை முற்றிலுமாக உடைத்து அப்புறப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்காக ரூ. 3.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து பாலத்தை முற்றிலும் இடிக்கும் பணி நேற்று காலை துவங்கியது. 2 பொக்லைன் இயந்திரம் மூலம் பாலம் இடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், பழைய பாலத்தை அப்படியே வைத்திருந்து காலப்போக்கில் ஒவ்வொரு தூணாக இடிந்து விழுந்தால், அருகிலுள்ள புதிய பாலத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகி விடும். பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை கருதி பழைய பாலம் இடிக்கப்படுகிறது. 6 மாதத்துக்குள்ளாக இப்பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.



Tags : Trichy Kollidam Bridge , Flood, Damaged, Collidam Bridge, Plan to Complete
× RELATED 4 ஆண்டுக்கு முன் பெருவெள்ளத்தில்...