×

2 குழந்தைகள் உள்பட இலங்கை தமிழர்கள் 10 பேர் தனுஷ்கோடிக்கு வருகை

ராமேஸ்வரம்: இலங்கையில் இருந்து 2 குழந்தைகள் உள்பட 10 பேர் தனுஷ்கோடிக்கு வந்தனர். இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடியால், அங்குள்ள தமிழர்கள், தமிழகத்திற்கு அகதிகளாக வந்தவண்ணம் உள்ளனர். கடந்த சில மாதங்களில் 200க்கும் மேற்பட்டோர் இங்கு வந்துள்ளனர். இலங்கையிலிருந்து நேற்று காலை 2 குழந்தைகள், 5 பெண்கள் உட்பட 10 தமிழர்கள், தனுஷ்கோடிக்கு வந்தனர். இவர்களை ராமேஸ்வரம் மரைன் போலீசார் மீட்டனர்.
விசாரணையில், இவர்கள் இலங்கை தலைமன்னார் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் (45), இவரது மனைவி யோகேஸ்வரி(42), மகள்கள் தமிழ்மதி(22), 15 வயது மகள், முல்லைத்தீவைச் சேர்ந்த புஷ்பம்(64), இவரது மகன் பிரபாகர்(43), யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜஸ்டின்(42), இவரது மனைவி அனுசுயா(31), 3 வயது மகள் மற்றும் 3 மாத ஆண் குழந்தை என்பது தெரியவந்தது. இவர்கள் மேல் விசாரணைக்காக மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் மண்டபம் அகதி முகாமில் சேர்க்கப்பட்டனர்.

Tags : Tamils ,Dhanushkodi , 10 Sri Lankan Tamils including 2 children visit Dhanushkodi
× RELATED தன்னம்பிக்கையை அதிகரிக்கும் களரி பயட்டு