×

செய்யாறு அருகே நெல்வாய் கிராமத்தில் 9ம் நூற்றாண்டு அய்யனார் சிலை கருடாழ்வார் சிற்பம் கண்டெடுப்பு

செய்யாறு: செய்யாறு அருகே நெல்வாய்  கிராமத்தில் கி.பி 9ம்  நூற்றாண்டைச் சேர்ந்த அய்யனார் சிலை, கருடாழ்வார் சிற்பம் பொறித்த கல்தூண், ஸ்தூபக்கல், கோமாரிக்கல் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா நெல்வாய் கிராமத்தில் தொன்மை வாய்ந்த சிற்பங்கள் இருப்பதாக வரலாற்று ஆய்வாளர்களுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் வரலாற்று ஆய்வாளர் எறும்பூர் செல்வக்குமார் நெல்வாய் கிராமத்தில் வயல்வெளி நடுவில் செல்லியம்மன் கோயில் அருகே புதைந்து கிடந்த அய்யனார் சிலை, கருடாழ்வார் சிற்பம் பொறித்த கல்தூண், ஸ்தூபக்கல், சந்து தெருவில்  கோமாரிக்கல் ஆகியவற்றை   கண்டெடுத்தார். இதுகுறித்து ஆய்வு செய்த செல்வகுமார் கூறுகையில், அய்யனார் சிற்பம் 34 சென்டிமீட்டர் உயரமும், 22 சென்டிமீட்டர் அகலமும் உடையது. இச்சிலை திறந்த வெளியில் இருந்தாலும் அழகு குலையாது காணப்படுகிறது.

அய்யனாரின் தலையை அடர்ந்த ஜடா பாரம் அலங்கரிக்கிறது. காதில் பத்திர குண்டலமும், கழுத்திலும் கால்களிலும் அணிகலன்கள் காணப்படுகின்றன. மேலும் பூணூல் அணிந்து பஞ்சகச்சம் வேட்டியுடன், முன் கொசவம், பின் கொசவத்துடன் கம்பீரமாக வலக்கையில் கெண்டை ஆயுதமும், இடக்கையை மடக்கிய வாரும் காட்சிதருகிறார். பீடத்தின் மீது வலக்காலை மடித்து, இடுப்புடன் அங்க வஸ்திரத்தை இணைத்து கட்டி குத்திட்ட வாரும், இடைக்காலை தொங்கவிட்ட நிலையிலும் அமர்ந்துள்ளார்.

அதேபோல் கல் தூணில் கருடாழ்வார் சிற்பம் 58 சென்டிமீட்டர் உயரமும், 28 சென்டிமீட்டர் அகலமும் உள்ளது. ஸ்துபக்கல் கலை நயத்துடன் உள்ளது. ஊரின் மையப்பகுதியான சந்து தெருவில் கோமாரிக்கல் அல்லது மந்தைவெளிகல் என்று அழைக்கப்படும் பழமையான கல் கண்டெடுக்கப்பட்டது. இக்கல்லின் உயரம் 60 சென்டிமீட்டர், அகலம் 30 சென்டிமீட்டர். தற்போது பொன்னியம்மன் கோயில் கட்டப்பட்டிருக்கும் இடத்தில் ஏற்கனவே லஷ்மி நாராயணன் கோயில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. கோயில் முழுவதும் காணாமல் போன நிலையில் அதனுடைய எச்சங்கள் காணப்படுவதால் பொதுமக்கள் கூறும் தகவல் உறுதியாகிறது.

எனவே தொல்லியல் ரீதியாக ஆய்வு செய்தால் பெருமாள் கோயிலின் பிற பாகங்கள் மற்றும் தகவல்கள் கிடைக்க வாய்ப்புகள் இருக்கின்றன. இவ்வூர் முன்னோர்களால் விஜய பூபதி நகரம் என்று அழைக்கப்பட்டதாக இப்போது இருக்கும் பெரியவர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வூரில் மூத்த தேவி சிற்பம், சாமுண்டி சிற்பம் கண்டெடுத்த நிலையில் தற்போது அய்யனார் சிலை, கருடாழ்வார் உருவம் பொறித்த பெரிய கல்தூண், ஸ்தூபக்கல், கோமாரிக்கல் ஆகியவை வரிசையாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் கிபி 9ம் நூற்றாண்டிற்கும் 10ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டதாக இருக்கலாம். சிற்பங்களின் கலை நுணக்கங்களை பார்க்கம்போது பல்லவர்கள் அல்லது சோழர் காலத்தை சேர்ந்ததாக இருக்க வாய்ப்புள்ளதது. நெல்வாய் கிராமம் தொன்மை வரலாற்றின் ஒரு அங்கமாக இருக்கிறது. தொல்லியல் ரீதியாக ஆய்வு மேற்கொண்டால் பல அரிய தகவல்கள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது’ என்றார்.


Tags : Ayanar ,Iyanar ,Nelvai village ,Doaru , Cheyyar, 9th century Ayyanar statue, Garudalwar sculpture, found
× RELATED மிகவும் பழமை வாய்ந்த அய்யனார் சிலையை பாதுகாக்க வேண்டும்