×

செம்புண்டி ஊராட்சியில் மக்களுக்கு இலவசமாக முருங்கை மரக் கன்று

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட செம்புண்டி ஊராட்சியில் அனைத்து குடும்பங்களுக்கும் முருங்கை  மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி அங்குள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளி வளாகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பழனிவேல் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் விமலா முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் பாலகிருஷ்ணன் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக அச்சிரப்பாக்கம் ஒன்றியக்குழு தலைவர் ஒரத்தி கண்ணன், ஒன்றிய கவுன்சிலர் செம்பூண்டி சிவா, அச்சிரப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகலா, பள்ளி தலைமை ஆசிரியை உஷா உள்ளிட்ட கலந்து கொண்டனர்.

தமிழக அரசின் அறிவுரையின்படி, பெண் குழந்தைகளுக்கு ரத்த சோகை ஏற்படுவதை தடுக்கும் விதமாக முருங்கை கீரையை  அதிகம் உணவில்  சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக ஊராட்சியில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் முருங்கை மர கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன. அங்குள்ள தொடக்கப்பள்ளியில் பயிலும் 53 மாணவ, மாணவியருக்கு ஷூக்கள் மற்றும் அடையாள அட்டைகள் இலவசமாக வழங்கப்பட்டன.

இதில் ஒன்றியக்குழு தலைவர் ஒரத்தி கண்ணன் பேசும்போது, ‘’கடந்த  மழைக் காலங்களில் சென்னை மாநகராட்சி  கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது. தற்போதைய மழையில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் வேகமான செயல்பாடுகள் காரணமாக தண்ணீர் தேங்குவது தவிர்க்கப்பட்டுள்ளது. இதுபோன்று உங்கள் ஊராட்சிகளிலும் அந்தந்த பகுதியை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் வேகமாக செயல்பட்டு எந்த ஒரு மழை பாதிப்பும் ஏற்படாத வண்ணம் வேகமான நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் நமது ஒன்றியத்தில் எந்த ஒரு மழை பாதிப்பும் ஏற்படாத வண்ணம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்றார்.

Tags : Cembanki Pavilion , Moringa tree sapling for the people of Sembundi Panchayat
× RELATED தனியார் பட்டாசு ஆலையில் சிக்கி...