×

ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்துபவர்களுக்கு மக்களைப் பற்றி கவலை இல்லை: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

சென்னை: சென்னை மாநகராட்சியின்  திரு.வி.க. மண்டலத்தைச் சேர்ந்த பட்டாளம். சென்னை உயர்நிலை பள்ளியில் மழைகால சிறப்பு மருத்துவ முகாமினை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, மற்றும் மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு பின், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

சென்னை மாநகராட்சி, வி.க நகர் பட்டாளம் மற்றும் பெரம்பூர் ஜமாலியா பகுதியில் வடகிழக்கு பருவமழையின்  காரணமாக பெய்த மழையால் தேங்கிய வெள்ள நீரை அகற்றும் பணி மற்றும் மழைநீர் வடிகால் அகலப்படுத்தும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தோம்.

சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் மக்களுக்கு எவ்வித உடல்நலக்குறைவும் எற்படாமல் பாதுகாக்கும் வகையில் இன்று மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமம் நடத்தப்படுகின்றது, பட்டாளம், சென்னை உயர்நிலை பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தோம்.

இம்முகாம்களில் பொதுமக்களுக்கு காய்ச்சல், சளி போன்ற அடிப்படை உபாதைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும், தேவைப்பட்டால் மேல் சிகிச்சைக்கு பொது மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படும் எனவே பொதுமக்கள் மருத்துவ முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.  

வடகிழக்கு பருவமழை காரணமாக பெய்த கனமழைக்கு பின் சென்னை மாநகரம் 98 சதவீதம் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது. இன்று மதியத்திற்குள் 100 சதவீதம் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும். வருகின்ற 9ஆம் தேதி கனமழை இருக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. அதனை சமாளிக்கவும் போதுமான நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி எடுத்து வருகிறது.

பருவமழை காலங்களில் சாலையில் பெரிய பள்ளங்கள் எதுவும் ஏற்பட்டால் அதனை சரி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது பருவமழைக்கு பிறகு சிறிய பள்ளங்களை சரி செய்து சாலைகள் அமைக்கப்படும்.

புளியந்தோப்பு, சவுகார்பேட்டை பகுதியில் கட்டிடம் இருந்து விழுந்த விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது, இடிந்த கட்டிடமானது பழமையான கட்டிடமாகும். அதனை அப்புறப்படுத்துவது தொடர்பாக ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. சென்னை மாநகராட்சியும் இடித்திட நோட்டீஸ் வழங்கி உள்ளது. ஆனாலும் கீழமை நீதிமன்றத்தில் ஒப்புதல் பெற்று குடியிருந்து வந்துள்ளனர்.

சென்னை மாநகராட்சியில் பழமையான கட்டிடத்தில் குடியிருப்பவர்களை கண்டறிந்து மாற்று இடத்தில் தங்க வைக்க வடகிழக்கு பருவமழைக்கு முன்பே மாண்புமிகு முதல்வர் அவர்கள் அறிவுறுத்தினார்கள். அதன்படி மாற்று இடத்திற்கு தங்க வைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனாலும் வீட்டின் உரிமையாளர்கள் கட்டிடம் சார்ந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்துபவர்களுக்கு மக்களைப் பற்றி கவலை இல்லை எப்படியாவது அமைதியாக இருக்கும் தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு வகையில் பிரச்சனையை ஏற்படுத்தி மக்களின் ஒற்றுமையை சீர்குலைத்து ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ்.பேரணியின் நோக்கமாகும். இப்படிப்பட்ட நோக்கங்கள் நிறைவேற்றுவதற்கு முதலமைச்சர் நிச்சயம் தடைக்கல்லாக இருப்பார். தமிழகத்தை அமைதி பூங்காவாக வைத்துக் கொள்ள முதலமைச்சர் எவ்வித நடவடிக்கைகளையும் எடுப்பார்.  

தங்களின் கொள்கை கோட்பாடு திட்டங்களை நிறைவேற்ற ஆர்.எஸ்.எஸ். அமைதி ஊர்வலம் என்ற பெயரில் வன்முறை ஏற்படுத்தும் நிகழ்வுகளை ஊடகங்கள் தோலுரித்து காட்ட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Tags : R.R. S.S. ,US ,rally ,Minister ,ZegarBabu , RSS Rally Organizers Don't Care About People: Minister Shekharbabu Interview
× RELATED அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு ரூ7.50 லட்சம் அபராதம்