×

அரும்பாக்கத்தில் பரபரப்பு: ராட்சத மரம் விழுந்து 6 வாகனங்கள் சேதம்

அண்ணாநகர்: வடகிழக்கு பருவ மழை காரணமாக சென்னை மாநகரில் நேற்று முன்தினம் மாலை முதல் நள்ளிரவு வரை தொடர்ந்து  கனமழை பெய்தது. இந்நிலையில், அரும்பாக்கம், பாரி தெருவில் இருந்த 100 ஆண்டு பழமைவாய்ந்த புங்கை மரம் நேற்று அதிகாலை 3 மணியளவில் வேரோடு சாய்ந்து, அங்குள்ள வீட்டின் மதில்சுவரின்மீது விழுந்தது. இதில், அந்த வீட்டின் அருகே நின்றிருந்த 2 சொகுசு கார்கள் மற்றும் 4 பைக்குகள் நொறுங்கி, முற்றிலும் சேதமடைந்தன. அங்குள்ள வீட்டின் முன்பு மரக்கிளைகள் முறிந்து கிடந்ததால், அங்கு வசிக்கும் மக்கள் வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் தவித்தனர்.

தகவலறிந்த கோயம்பேடு தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் 30க்கும் மேற்பட்ட வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் ராட்சத அறுவை இயந்திரத்தின் மூலம் சுமார் 3 மணி நேரத்துக்கு மேல் போராடி, வீட்டின் முன்பு விழுந்து கிடந்த ராட்சத மரத்தை தீயணைப்பு வீரர்கள் வெட்டி அகற்றினர்.
மேலும், மரத்தின் அடியில் சிக்கியிருந்த கார், பைக் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களை அகற்றினர். அதிகாலை நேரத்தில் ராட்சத மரம் முறிந்து விழுந்ததால்  உயிர்ச்சேதம் போன்ற பெரிய அசம்பாவிதம் எதுவும் நடைப்பெறவில்லை. தீயணைப்பு படையினரின் துரித நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

இதுகுறித்து, தீயணைப்பு துறையினர் கூறுகையில், ‘‘கனமழை காரணமாக வீடுகளின் முன்பு தேங்கியுள்ள மழைநீர், மரங்கள் விழுந்து கிடந்தால், அவற்றை அகற்றுவதற்கு தீயணைப்பு துறை 24 மணி நேரமும் தயார்நிலையில் உள்ளது. தங்களது பகுதியில் மழை பாதிப்பு இருந்தால் மக்கள் தீயணைப்பு துறையை தொடர்பு கொள்ளலாம்,’’ என்றார்.

Tags : Arumbakkam , Arumbakkam riot: Giant tree falls and 6 vehicles damaged
× RELATED இளம்பெண்ணுக்கு லவ் டார்ச்சர்: வாலிபர் சிறையில் அடைப்பு