கோவை: கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் பலியான ஜமேஷா முபின் தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டமிட்டாரா? என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. கோவை உக்கடம் கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் முன்பு கடந்த மாதம் 23ம் தேதி கார் வெடித்த விபத்தில் ஜமேஷா முபின் (29) பலியானார். இந்த வழக்கின் விசாரணை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) வசம் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக, கோவை மாநகர தனிப்படை போலீசார் கைதான 6 பேர் வீட்டில் சோதனை நடத்தினர். இதில், 6 பேரில் ஒருவரது வீட்டில் பென் டிரைவ் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது.
அதனை போலீசார் ஆய்வு செய்த போது அதிர்ச்சி ஏற்பட்டது. அதில், ஐஎஸ் தீவிரவாதத்துக்கு ஆதரவான ஏராளமான வீடியோக்கள் இருந்தன. தீவிரவாதிகளின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பது போன்ற வீடியோக்கள் மற்றும் கழுத்தை அறுத்து கொலை செய்வது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது போன்ற வீடியோக்கள் இருந்தன. இதனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஜமேஷா முபின் குறித்து தற்போது பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் விவரம் வருமாறு: கோவை கார் வெடிப்பில் பலியான ஜமேஷா முபின் தனது உடலில் உள்ள ரோமங்களை அகற்றியது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது இஸ்லாமிய நாடுகளின் ஐஎஸ் சித்தாந்தத்தை பின்பற்றும் நடைமுறை. எனவே, அவர் தற்கொலைப்படை தாக்குதலை நடத்த திட்டமிட்டு சதி செய்ததாக கூறப்படுகிறது. மேலும், முபினின் மனைவி நஸ்ரத் வீட்டில் இருந்த 2 பெட்டிகள் குறித்து கேட்டபோது, அது பழைய துணிகள் என முபின் தெரிவித்துள்ளார். அந்த 2 பெட்டிகளிலும் வெடிபொருட்கள் இருந்ததை முபின் மறைத்துள்ளார். காது கேளாத மற்றும் பேச்சு திறன் குறைபாடுள்ள நஸ்ரத், தனது சகோதரி நிலோபர் நிஷாவின் உதவியோடு, தனது கணவரின் திட்டங்கள், செயல்பாடு முழுமையும் தனக்கு தெரியாது என போலீசில் தெரிவித்துள்ளார்.