×

போலீஸ் நிபந்தனைகளை மீறக்கூடாது 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்திற்கு பதற்றமான 6 இடங்களை தவிர மற்ற இடங்களில் அனுமதி வழங்குமாறு காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அக்டோபர் 2ம் தேதி ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க மறுத்த காவல்துறை உத்தரவுகளை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தொடர்ந்த 50 வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், நவம்பர் 6ம் தேதி ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால், அனுமதி வழங்கவில்லை என்று காவல்துறைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது ஆர்.எஸ்.எஸ் தரப்பில் கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் வழங்கவில்லை. அனுமதி அளித்த உத்தரவை செயல்படுத்தாமல், நீதிமன்ற உத்தரவை அவமதித்துள்ளதாக  வாதிடப்பட்டது. காவல்துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, ஆர்.எஸ்.எஸ். விண்ணப்பங்களில் அனுமதி வேண்டுமென செப்டம்பர் 30ம் தேதி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு பிறகு வேறு மாதிரியான சூழல் ஏற்பட்டுள்ளது. அதை கருத்தில் கொண்டே 3 இடங்களில் மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. மேலும் 23 இடங்களில் உள்ளரங்கு கூட்டமாக நடத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. மீதமுள்ள 24 இடங்களில் அனுமதி வழங்க இயலாது என்று தெரிவித்து உளவுத்துறையின் அறிக்கையை தாக்கல் செய்தார்.

இதையடுத்து, உளவுத்துறையின் அறிக்கையை பார்த்த பிறகு மீதமுள்ள 47 இடங்களில் அனுமதி வழங்குவது குறித்து உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதி குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நீதிபதி, உளவுத்துறை அறிக்கையை  படித்து பார்த்ததாகவும் கடந்த 2007, 2008 ஆண்டுகளின் வழக்குகள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருப்பூர் மாவட்டம் பல்லடம், நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம் அருமனை ஆகிய 6 இடங்களை தவிர மற்ற இடங்களில் ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும். காவல்துறையின் நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும். அணிவகுப்பு ஊர்வலத்தில் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறக் கூடாது. மீறி நடந்தால் ஆர்.எஸ்.எஸ் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Tags : No Violation of Police Conditions Allowed for RSS Rally at 44 Places: High Court Order
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...