×

சென்னையில் கடந்த 7 நாட்கள் நடைபெற்ற சிறப்பு சோதனையில் போதை பொருட்கள் விற்பனை செய்ததாக 19 குற்றவாளிகள் கைது: சென்னை மாநகர காவல்துறை

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், கடந்த 7 நாட்கள் சிறப்பு சோதனை மேற்கொண்டு, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் வைத்திருந்தது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 19 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 6 கிலோ 10 கிராம் கஞ்சா பறிமுதல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
 
இது தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்:
சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டதன்பேரில், கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில், துணை ஆணையாளர்கள் கண்காணிப்பில், உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில். காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தங்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

 இதன் தொடர்ச்சியாக காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 28.10.2022 முதல் 03.10.2022 வரையிலான 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, கஞ்சா உள்பட போதை பொருட்கள் கடத்தி வருதல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 19 குற்றவாளிகள் கைது. 6 கிலோ 10 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதில் குறிப்பிடும்படியாக, அடையாறு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு (Adyar/PEW) காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் கடந்த 31.10.2022 காலை, சைதாப்பேட்டை, கலைஞர் வளைவு அருகே கண்காணித்து சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 1.சந்துரு, வ/22, தபெ.சிவகுமார், அருள்நகர் 4வது தெரு, சூரப்பட்டு, சென்னை, 2.முருகன், வ/20, த/பெ.நடராஜன், அண்ணாசாலை 2வது மெயின் ரோடு, சீனிவாசா நகர், பாடி, சென்னை ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 கிலோ எடை கொண்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்ந்து, அடையாறு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு (Adyar/PEW) காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் கடந்த 31.10.2022 தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, சைதாப்பேட்டை இரயில் நிலையம் அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த நிஷாந்த், வ/26. த/பெ.பாஸ்கர்,அண்ணாநகர் 3வது தெரு, பாடி புதுநகர், சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 900 கிராம் எடை கொண்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

D-3 ஐஸ் அவுஸ் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் கடந்த 28.10.2022 அன்று இராயப்பேட்டை, டாக்டர்.பெசன்ட் லேன் பகுதியில் ரகசியமாக கண்காணித்தபோது, அங்கு ஒரு நபர் ரகசியமாக கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. அதன்பேரில் மேற்படி இடத்தில்  சட்ட விரோதமாக கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த ஷேக் முகமது மதார், வ/29, த/பெ.சாகுல் அமீது, எண்.178/116, டாக்டர் பெசன்ட் லேன், இராயப்பேட்டை, சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

 F-3 நுங்கம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (03.11.2022) போரூர் பகுதியில் உள்ள வீட்டில் கஞ்சா, கத்தி கள் மற்றும் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைத்திருந்த 1.தினேஷ் (எ) பீடி தினேஷ், வ/23, த/பெ.பழனி, வைகுண்டபுரம் முதல் தெரு, நுங்கம்பாக்கம், சென்னை, 2.முகமது அஜீம், வ/22, த/பெ.அப்துல் கயூப், ஏழுபிடாரியம்மன் கோயில் தெரு, ராஜேஸ்வரி நகர், போரூர், 3.அருள் பிரான்சிஸ், வ/20, மனோகர், ரங்கராஜபுரம், சத்யாநகர், சைதாப்பேட்டை ஆகிய மூவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 கத்திகள், 5 நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் 1.1 கிலோ கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில், காவல் துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில், உதவி ஆணையாளர்கள் தலைமையில், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஆளிநர்கள் அடங்கிய காவல் குழுவினர், தீவிர விசாரணை மற்றும் தனிக்கவனம் செலுத்தி கடந்த 2021 மற்றும் 2022 ஆண்டுகளில் இதுவரை, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 625 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 1,427 குற்றவாளிகளின் சொத்து மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் சேகரித்து, சட்டரீதியாக முடக்கும் பணி தீவிரபடுத்தப்பட்டு இதுவரையில் மொத்தம் 759 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.  கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 6 குற்றவாளிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags : Chennai ,Chennai Metropolitan Police , Chennai, special search, sale of drugs, arrest of criminals, Chennai Metropolitan Police
× RELATED சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பணி...