×

ஐ.ஜி முருகனுக்கு எதிரான பாலியல் புகாரை விரைந்து விசாரித்து முடியுங்கள்: சிபிசிஐடி, விசாகா கமிட்டிக்கு ஐகோர்ட் ஆணை

சென்னை: ஐ.ஜி முருகனுக்கு எதிரான பாலியல் புகாரை விரைந்து விசாரித்து முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக லஞ்சஒழிப்புத்துறையில் பணியாற்றிய ஐ.ஜி முருகன், தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அதேதுறையில் பணியாற்றி வந்த பெண் எஸ்.பி. கடந்த 2018ம் ஆண்டு புகார் அளித்திருந்தார். புகாரின் மீது அப்போதைய அரசு நடவடிக்கை எடுக்காததால் பெண் எஸ்.பி. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் தலைமை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், சிபிசிஐடி மற்றும் விசாகா கமிட்டி விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து கடந்த 2019ம் ஆண்டு ஐ.ஜி.முருகன் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு, நீதிபதிகள் பரேஷ் உபாத்யாயா, பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், ஐ.ஜி. முருகன் மீதான புகாரை விசாரிக்க ஏற்கனவே அமைக்கப்பட்ட விசாகா குழு தற்போது மாற்றி அமைக்கப்பட்டதாக கூறி அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். இதற்கிடையே முருகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே அமைக்கப்பட்ட விசாகா கமிட்டிக்கு தாங்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், ஏற்கனவே அமைக்கப்பட்ட விசாகா கமிட்டி மாற்றியமைக்கப்பட்டுள்ளதால் தற்போதைய விசாகா கமிட்டி விசாரிப்பதில் எந்தவொரு ஆட்சேபனையும் இல்லை என்றும் தெரிவித்தார். இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், ஐ.ஜி முருகனுக்கு எதிரான  பாலியல் புகாரை விரைந்து விசாரித்து முடிக்க சிபிசிஐடி மற்றும் விசாகா கமிட்டிக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர். 


Tags : IG ,Murugan ,IG Murugan ,CBCID ,Visakha committee , IG Murugan, Sexual Complaint, CBCID, ICourt
× RELATED பள்ளிகள் விடுமுறையையொட்டி...