×

டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு: நாளை முதல் தொடக்கப்பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாநில அரசு அறிவிப்பு..!!

டெல்லி: டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பால் தொடக்க பள்ளிகளை நாளை முதல் மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. காற்று மாசு குறைந்து இயல்பு நிலை திருப்பும் வரை டெல்லியில் தொடக்க பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் என மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகைக்கு பிறகு டெல்லியில் காற்றின் தரம் மோசமான அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் வேளாண் கழிவுகளை விவசாயிகள் தீ வைத்து எரிப்பதால் எழும் புகைமூட்டம் டெல்லி முழுவதையும் வியாபித்திருக்கிறது. இதனால் காற்றில் பிராண வாயுவின் விழுக்காடு பெருமளவு குறைந்து காற்றின் தரம் மோசமடைந்துள்ளது.

குறிப்பாக உத்திரப்பிரதேசம் - டெல்லி எல்லையில் உள்ள நொய்டா நகரத்தில் காற்றின் தரம் அபாயகரமான அளவான 562 புள்ளிகளை எட்டியிருப்பதாக காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில், காற்றின் தரம் மேம்படும்வரை தொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாநில முதல்வர் அறிவித்துள்ளார். 5ம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கான வெளிப்புற செயல்பாடுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக கெஜ்ரிவால் கூறியுள்ளார். ஒற்றைப்படை, இரட்டைப்படை வாகன எண் அடிப்படையில் கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.


Tags : Delhi ,State government , Delhi, air pollution, primary school, holidays
× RELATED நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் வழக்கு: கூடுதல் அவகாசம் கோரி போலீஸ் மனு